Thursday, July 20, 2006

சூடிக்கொடுத்த கோதை

ஆண்டாள், நமது பக்தி இலக்கியவாதிகளுள் ஒரு தனிப்பெருங்கவி. பன்னிரண்டு ஆழ்வார்களுள் அவளும் ஒருத்தி; கட்டக் கடைசி மட்டுமல்ல, அந்த வரிசையில் இடம் பெற்ற ஒரே ஒரு பெண்மணி அவள்தான்.

உலக வரலாற்றில் ஆண்டாளுக்கு இணையான காதல் கவிகள் வேறு யாரும் கிடையாது. இன்று வரைக்கும் இல்லை எனலாம். ஆண்டாள்தான் காதலை கனிந்து உள்ளுருகி பாடிய பெண் கவிஞர். தன் காதலை இனிய தமிழில் சொல்லோவியமாக,என்றும் வாடாத பாமாலையாக பாடி,சூடி மகிழ்ந்தாள். காதல் வெள்ளம் சுழித்து கரைபுரண்டு ஓடியது. அந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவளுக்கு, என்ன செய்வது என்று தெரியாது நோன்பு நோற்ற கோதை பரமனை சேர்ந்தாள். பரந்தாமன் புருஷோத்தமனைக் காதலித்த தனிப்பெருங்காவியம்தான் ஆண்டாளின் வாழ்க்கை

அந்தக் காலத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் என்கிறர் வசித்து வந்தார். அருமையான புலவர். இந்த விஷ்ணு சித்தர்தான் பின்னாளில் பெரியாழ்வர் என்று
அழைக்கப்பட்டவர். ஒருநாள் நந்தவனப் பெருமாளுக்கு மாலை தொடுக்க மலர்களை கொய்து கொண்டிருந்தபோது துளசிச் செடிகளின் ஊடே இயற்கை அழகின் வடிவாக கிடந்த பெண் குழந்தையாக,தங்கக் கனியாக ஆண்டாள் கிடைக்கப்பெற்றார். விஷ்ணுசித்தருக்குக் குழந்தை இல்லை. ஆண்டாளுக்கும் பொறுப்பாளர் இல்லை. பொருத்தமான அமைப்பாக அமைந்திடவே அவர் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

குழந்தைகளுக்கு பயம் காட்ட சில சமயங்களில் நமது பெரிசுகள் பூச்சாண்டியிடம் பிடித்து கொடுத்துவிடுவேன், அடம் பிடிக்காமல் இரு என்று கூறுவதுண்டு. விஷ்ணு சித்தருக்கு பூச்சாண்டி தெரியாத காரணத்தால் ஒரு சமயம் வேடிக்கையாக அரங்கனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிறேன் என்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லவே சிறுமியான ஆண்டாளுக்கு மனதில் பதிந்து விட்டது.

சிறுமியான ஆண்டாள் அதையே உண்மை என்று நினைந்துவிட்டால். அன்று தொடங்கி திருவரங்கத்தில் இருக்கிற அரங்கன்தான் தன் புருஷன் என்று உளமாற நம்ப ஆரம்பித்துவிட்டாள். கோதைக்கு இயல்பிலேயே அரங்கன் மீது மாளாக் காதல் மலர்ந்திட,அவள் அரங்கனை அடையவே பிறவி எடுத்தவள் என்று திடமாக நம்பினாள். நாளுக்கு நாள் கண்ணன் மீது ஆண்டாளுக்கு காதலும் வளர்ந்தது. பாவை நோன்பு நோற்றாள். அவ்வகையில் திருப்பாவை நாச்சியார் திருமொழி என்று இரு பிரபந்தங்களை அருளினாள்.

மகளுக்கு திருமண வயது வந்துவிட்டதே!அவள் விருப்பத்தை அறியக் கேட்டபோது, அவளிடமிருந்து மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே!
என்று பாட்டாய் பதிலாக வந்தது. இறுதியாக, ஏழு கமலப் பூவழகுகளையுடைய திருவரங்கத்தம்மானையே மணப்பேன் என்றாள்.

விஷ்ணு சித்தர் தினம் கோவிலுக்குப் போவார். தன் கையால் தொடுத்த மாலைகளை வடபத்ர சாயிக்கு அணிவித்து அழகு பார்ப்பார். பாசுரங்கள் பாடுவார். இறை ஊழியம் செய்துவிட்டு வீடு திரும்புவார். அப்படி ஒரு நாள் இறைவனுக்குச் சூட மலர் மாலையை எடுத்த போது மாலையில் ஒரு பெண்ணின் தலை முடி இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார் விஷ்ணுசித்தர்.

எப்படி இது நடக்க முடியும்? இறைவனுக்குச் சூட்டவேண்டிய மாலையை எந்தப் பெண் தன்தலையில் சூடி அழகு பார்த்திருக்க முடியும்? ஆண்டாளா? ஆண்டாளா அப்படிச் செய்தாள்? சந்தேகமே இல்லை. ஆண்டாள்தான்.அவள் தான் அதைச் செய்திருப்பாள். அவளால் மட்டும் தான் அப்படிச் செய்திருக்கவும் முடியும்!

இதிலென்னப்பா தப்பு இருக்கு? இறைவன் யார்? நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர்தானே? நான் முதலில் சூடிப் பார்த்து விட்டு அவருக்குச் சூட்டினால் என்ன குடி முழுகிப்போய் விடும்? என்று கேட்டாள் ஆண்டாள்.

ஆடிப்போய்விட்டார் விஷ்ணு சித்தர். அவர் பெரிய சாரசீலர். கோயில் காரியங்களெல்லாம் சாரமாக, முறைப்படி நடக்கவேண்டும் அவருக்கு; ஆனால் தன் மகளே இப்படி ஒரு அபசாரத்தைச் செய்திருக்கிறாள்! கடவுளே, இதற்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ என்று பதைத்தது அவரது பக்தி மனம்.

அன்றைக்கு மட்டுமல்ல, பல நாட்களாவே ஆண்டாள் இறைவனுக்குக்காக தந்தை கட்டி வைக்கும் மாலைகளை முதலில் தான் சூடி ஒரு கிணற்றின் நீரில் அழகு பார்த்துவிட்டுதான் அதைக்கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்து வந்திருக்கிறாள். காதல் என்று வந்திவிட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல்தானே கப்பெரிய புனிதம்! பின்னால் இதுபற்றி விஷ்ணுசித்தர் அழுது அரற்றி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டபோது, பாமாலைப் பாடித் தரப்பிறந்தாள், பூமாலை சூடிக்கொடுக்கவும் பிறந்தாள் என்று கூறியது பெரியாழ்வருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அதன்படி பெருமாள் சொன்னபடி அவர் செய்து வந்தார். அன்று முதல் சூடிக் கொடுத்தவள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று எம்பிரானையே ஆண்டுவிட்டாள் என்பதால் ஆண்டாள் என்னும் பெயர் விளங்கிற்று.

கதைகள் எப்போதும் சுவார்சியமானவைதான். ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையை விட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரிசியமானது, சுவையானது. அவள்தான் தமிழை முதல் நவீனப் பெண் கவிஞர். அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதிநவீன சங்கதிகளை மட்டும்தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.

ஒரு உதாரணம் சொன்னால் விளங்கும். ஆண்டாளுக்கு, அவளது காதலனான மகா விஷ்ணுவின் உதட்டில் முத்தமிடவேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில். எப்படி முத்தமிடவேண்டும்? அவர்க்கும் ஒரு அனுபவம் வேண்டுமல்லவா? ஏற்கனவே மணந்த மகா லட்சுமியை கேட்கலாம். அது பிரச்சனையாகி சக்களத்தி சண்டையாக வந்து விடும்.

வேறு யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட்டே, என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே! அதை வைத்துதானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்! அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே!

இந்த யுக்தி உதயமானதுமே கவிதை பீறிட்டுக் கொண்டு புறப்பட்டு விடுகிறது.

கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே !


கற்பூரம் என்றால் மகா விஷ்ணுவுக்கு உகந்த பச்சை கற்பூரம். கமலப்பூ என்றால் கமலப்பூ தான். பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம் சந்தேகம் கேட்கிறாள்.மாதவனின் வாய்ச் சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் சை சையாக கேட்கிறேன்,சொல்லித் தொலை என் வெண் சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!


இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்? ஆண்டாள் அதிகம் பாடவில்லைதான். மொத்தம் 143 பாடல்தான். ஆனால்,நாச்சியார் திருமொழி என்று வைவணவர்களின் நான்காவது வேதமான நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் அந்தப் பாசுரங்களுக்கு ஒரு நட்சத்திர அஸ்தஸ்து உண்டு. எளிமையும் இனிமையுமான காதல் பாடல்தான் எல்லாமே. பக்தியில் பல வகைகள் உண்டு. இறைவனை தாயாய்,தந்தையாய்,தோழனாய், தலைவனாய், தொண்டனாய் இன்னும் பலப்பல வடிவங்களில் கண்டு,பாடி பக்தி செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
னால் காதலனாக வரித்துக்கொண்டு கவிதை மழை பொழிந்தவள் ஆண்டாள் தான்! வடதேசத்துக்கு ஒரு மீரா என்றால் நம்மூருக்கு ஆண்டாள்! மார்கழி மாசமானால் அதிகாலை பொங்கலுடன் உள்ளே நுழையும் திருப்பாவைதான் ஆண்டாள். இறைவனை மணப்பதற்காகப் பாவை நோன்பிருந்து அதிகாலை
வேளையில் தினசரி ஒன்றாக் ண்டாள் பாடிய முப்பது பாடல்கள் அவை.

என்ன இந்தப் பெண் இப்படி ஒரு அரங்கன் பித்து பிடித்து அலைகிறாளே என்று அவளது அப்பாவுக்கு ரொம்ப கஷ்டமாகப் போய்விட்டது. வில்லிபுத்தூர் இறைவனான வட பத்ரசாயிடம் போய் கதறி, கண்ணீர் மல்க தன் மகளுக்கொரு வழி காட்டும்படி வேண்டினார். அவரால் வேறென்ன செய்ய முடியும்!

இறைவன் உத்தரவுப்படியே விஷ்ணு தன் மகளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துப் போனார். சன்னதியில் அவர் கண் மூடிப் பிராத்தித்துக் கொண்டிருந்த போதே அரங்கன், கோதையைத் தன்னோடு சேர்த்துக் கொண்டுவிட்டார். பின்னர் பெரியாழ்வார் பொருமாளை நோக்கி ஑ஒஉலகறிய,நாடறிய வேதம் முழங்க வில்லிபுத்தூர் வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்! என்று பிராத்தித்தார். அவரது விருப்பதற்கு இணங்கண்டவன் மீண்டும் ண்டாளை வில்லிபுத்தூரில் உதிக்கச் செய்து, நாராயணனே முறைப்படித் தன் பரிவாரங்களை அனுப்பியப் பெண் கேட்டு,திருமணம் முடித்து ஊர் திரும்பியதாகவும் கதை. காதல் என்றில்லை. எந்த ஒரு விஷயத்தையுமே அதிக பட்சத் தீவிரமுடனும் அக்கறையுடனும் அணுகும்போது வெற்றி நிச்சியம் என்பதற்கு ஆண்டாளி஢ன் காதல் வெற்றி ஒரு உதாரணம்.

ஆண்டாள் கால நிலையைக் கணிக்க, அபூர்வமாக நடந்த ஒரு வானியல் நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறார், ஆராய்ச்சிப் பேரறிஞர் மு.இராகவையங்கார்.

"வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று..."

என்ற திருப்பாவை பதின்மூன்றாம் பாட்டின் அடியே அவருக்கு உதவியது. வெள்ளி எழுதலும், அதே சமயத்தில் வியாழம் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. 8-ம் நூற்றாண்டில் இம்மாதிரி நிகழ்ந்தது. 731-ம் ண்டு டிசம்பர் 18-ம் தேதி அதிகாலை 3.50 முதல் 4 மணிக்குள், அந்த மார்கழிப் பெளர்ணமியே திருப்பாவை தோன்றிய நாள். இதன்படி, கி.பி.716-ம் ஆண்டு திருஆடிப்பபூரத்தில் ஆண்டாள் தோன்றி, தன் பதினைந்தாம் வயதில், அதாவது கி.பி. 731-ம் ஆண்டில் திருப்பாவை இயற்றியதாக
மு. இராகவையங்கார் கூறுவது பொருத்தமாக உள்ளது.

அரங்கன் மீதான அவளது காதலின் மீதோ, அதன்வெற்றியின் மீதோ, யாருக்கும் கருத்து வேறு பாடே இல்லை. கதைகளும் சரி, காலமும் சரி ஆண்டாளை எப்படியோ கடவுளாக்கிவிட்டன. ஆனால் ஒரு கவிஞராக மட்டுமே பார்க்க முடியுமானால் அவள் அளவுக்கு தமிழ்ப் பாடல்களில் எளிமையும் அழுத்தமும், பாவமும், ரசமும் கொண்டு எழுதியவர்கள் யாருமில்லை. ஆண்டாளை பிறவிக் கடவுளாக ஒப்புக்கொள்ளாதவர்கள் கூட ஒரு பிறவிக் கவியாக ஒப்புக்கொள்ள வேண்டும்

அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கப்பூர்