Tuesday, September 28, 2010

சித்தர் வழியில்..-சிவ வாக்கியர் #3

சிவ வாக்கியர் தினம் மூங்கில் பிளப்பதும்,
முறம், கூடைகள் செய்வதும் பார்த்து ஆச்சரிப்பட்டார்
கொங்கண சித்தர். அவருக்கு ஏதாவது உதவி
செய்ய விரும்பினார். ஒருநாள் சிவ வாக்கியர்
குடிசையில் இல்லாத நேரத்தில் கொங்கணவ
சித்தர் சென்றார். குடிசையில் சிவ வாக்கியர்
மனைவி மட்டுமே இருந்தார்.

’’வீட்டில் ஏதாவது உபயோகமில்லா இரும்புத்
துண்டு இருந்தால் கொண்டு வா அம்மா’’ என்று
கேட்டதும் சிவ வாக்கியாரின் மனைவி வீட்டில்
கிடந்த சில இரும்புத் துண்டுகளைக்
கொண்டுவந்து கொடுத்தார். கொங்கணவர்
அந்த இரும்புத்துண்டுகளை எல்லாம் தங்கமாக
மாற்றிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

சிவ வாக்கியர் வீடு திரும்பி வந்தபோது அவரது
மனைவி கொங்கணவர் வந்து போனதை கூறியபடி
தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்து முன்னால்
கொட்டினாள். சிவ வாக்கியர் அதனைக் கண்டு
திடுக்கிட்டு, கொங்கணவச் சித்தர் தன்னை
சோதிக்கிறா அல்லது அன்பின் மேலீட்டால்
இப்படி செய்தாரா என்று திகைத்தார்.
”” இந்த ஆட்கொல்லியை ஒரு நிமிடம் கூட
இந்த குடிசைக்குள் வைத்திருக்காதே,
ஏதாவது பாழும் கிணற்றில் போட்டுவிடு.
ஆட்கொல்லி…, ஆட்கொல்லி”” என்றார்
சிவ வாக்கியர்.அதைக் கேட்ட அவருடைய
மனைவி மறுபேச்சு எதுவும் பேசாது
தங்கத்தைக் கொண்டு போய் கிணற்றில் போட்டாள்.

பின்னொரு நாளில் நடுப்பகலில் சூரியன்
சுட்டெரித்துக்கொண்டிருந்த சமயத்தில்
ஒரு பாறையின் மீது சிறுநீர் கழித்து விட்டு
தன்னுடைய மனைவி அழைத்து,
‘’இந்த பாறையின் மீது தண்ணீரைக் கொட்டு”
என்றார். அவளும் தண்ணீரை அந்தப் பாறையின்
மீது ஊற்றிய போது குப்பென்று புகை கிளம்பி மறைந்தது.

அந்த பாறை தங்கமாக மாறியது.
சிவ வாக்கியர் சித்தரின் சிறுநீர் இரசவாத
தன்மை பெற்றதால் அந்த மாயம் நிகழ்ந்தது.

சிவ வாக்கியர் தன் மனைவியைப் பார்த்து
”கொங்கணவர் கொடுத்தது சிறிய தங்கத்துண்டு.
இதோ வேண்டிய அளவு தங்கத்தை வெட்டி
எடுத்துக்கொள் “ என்றார்.

“சுவாமி, உங்களுக்கு நான் மனைவியாகிய
பின்பு தங்கம் எனக்கு எப்படி உயர்ந்த பொருளாகும்.
என்னைப் பொருத்தமட்டில் இது ஆட்கொல்லிதான்.
எனக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.

ஞானமார்க்கத்தில் திகழ்ந்த சிவ வாக்கியரை
சுற்றி புதிய சீடர்கள் நாளும் தேடி வந்த
வண்ணமிருந்தனர். தேடி வந்த சீடர்கள்
எல்லாம ஞானம் பெறுவதை விட தங்கம்
தேடியதே அதிகம். திரும்ப திரும்ப இரசவாத
வித்தை அறியவே விரும்பினர். இதனால் அவர்
மிகவும் மனம் வருந்தினார்.

“உங்களுடைய ஆவல் எல்லாம் எனக்கு புரிகிறது.
இரசவாத வேதியல் இரகசியங்களைப் பற்றி
அறியவே விரும்புகிறீகள். கடும் தவத்தாலும்
யோகத்தாலும்தான் இது சித்திக்கும்” என்றார்.

”அப்படி என்றால் குருநாதரே! எங்களுக்கு
அந்த இரசவாதம் கைக்கூடும் சாத்தியம் உண்டா?
“தங்கத்தின் மீது பற்றற்றவருக்கே தங்கத்தை
உருவாக்கும் இரசவாதம் சித்தியாகும். சித்தர்கள்
பலருமே இரசவாத வித்தையில் தேர்ந்தவர்கள்தான்.
தாங்கள் அறிந்த அனுபவங்களை எல்லாம் இந்தப்
பிரபஞ்சத்துக்கு காணிக்கையாக அளித்துள்ளார்கள்.
யோக நெறியில் நின்று இரசவாதம் அறிந்தவர்கள்
தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.தவ வலிமையும்,
யோக நெறியும் உடைய சித்தர்களுக்குதான்
இது சித்திக்கும்”.

”பற்றற்ற சித்தர்களுக்கு அந்த சித்தினால்
என்ன பயன் சுவாமி” என்று மனம் நொந்த
போன நிலையில் ஒரு சீடன் கேட்டான்.

”தங்களது கடும் தவத்தாலும், யோகத்தினாலும்
பெற்ற சித்திகள் அனைத்தும் பலவீன மாந்தருக்காகவே
அர்ப்பணம் செய்துள்ளனர். சித்தரைப் போல
மேன்மை நிலை அடைய நீ விரும்புகிறாயா?
அல்லது பலவீனமான மாந்தர் நிலையே
போதும் என்று கூறுகிறாயா?”

“இரசவாதம் அறியும் சித்தர் போன்ற உயர்நிலை
அடைவதற்கே தங்களிடம் சீடராக வந்துள்ளேன்”
என்றான்.

“அப்படியா! நல்லது. ரஸம் என்பது சிவபெருமானின்
விந்து. உன்னிடம் விந்து இருக்கும் போது சிவன்
விந்துவை ஏன் தேடுகிறாய்? உனக்குள்ளே இருக்கும்
விந்தை மணியாக்கிக் கொண்டால் அற்புதமான
ஆற்றல்களைப் பெறலாம். யோக சாஸ்திரத்தின்
இறுதி நிலை சமாதி. ஒருமுறை இந்தப்
பிரம்மானந்தத்தைச் சுகித்து விட்டால் போதும்.

அவன் இந்தப் பிரம்மானந்தமாகிய பேரின்பத்தில்
திளைத்தவனுக்கு லெளகீக சுகங்கள் துச்சமாகிவிடும்.
இந்தச் சாதகன் விரும்பும் போது அவனுக்கு முக்தி
எனும் ஆன்ம விடுதலை கிடைக்கும். சரி இப்போது
நீ எதனை விரும்புகிறாய்? என்று சிவ வாக்கியர்
கேட்டபோது சீடனின் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது.

“எனக்கு ரஸமும் வேண்டாம்; தங்கமும் வேண்டாம்,
எனக்குச் சமாதி நிலை சித்திக்க அருள் புரியுங்கள்”

“ மூச்சைக் கட்ட முதலில் பழகு,
“ நடு கால் நிறுத்து.“
’’சகஸ்ராரம் எனும் ஆயிரம் இதழ்த் தாமரையில்
மூச்சை நிறுத்தி “ அதுவே யோகம்’’, -
என்று பயிலும் சாதனையினை சிவ வாக்கியரிடம்
கற்றபோது சீடர்களுக்கு மனமொடுங்கியது.

“ மனம் பழுத்தால் பிறவி தங்கம் –
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் –
தங்கத்தை எண்ணிப் பங்கம் போகாதே
தங்க இடம் பாரப்பா …..”

ஆட்கொல்லியை வென்ற சித்தர்

சிவவாக்கியர் தொடர் நிறைவு.
வணக்கம்
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர் வழியில்...- சிவ வாக்கியர் #2

” வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா அம்மா? ”
என்று சிவ வாக்கியர் கேட்டார். ”அய்யா, தாங்கள் யாரென்று
தெரியவில்லை. என்னுடைய பெற்றோர்கள் கூடைமுடைய
மூங்கில் வெட்டப் போயிருக்கிறார்கள்.”
“ பெண்ணே! நான் சாப்பிட்டு பலநாள் ஆகிவிட்டது.
எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. என்னிடம் பேய்ச்
சுரைக்காயும் மணலும் இருக்கிறது.
இவற்றைச் சமைத்து எனக்கு உணவு பரிமாற முடியுமா ?
என்று சிவ வாக்கியர் கேட்டபோது பதிலேதும்
கூறாது அவரிடமிருந்து அதனைப்பெற்றுக்கொண்டு
உள்ளே சென்றாள்.

ஏளனமாக ஏதும் கேள்வி கேட்காமல்
பரிபக்குவ நிலையில் பேய்ச்சுரைக்காயையும்
மணலையும் பிசைந்து எவ்விதக் குறைபாடும்
இல்லாமல் சமைத்து வைத்து அவரைச்
சாப்பிட அழைத்தாள்.

குருநாதர் அடையாளம் காட்டிய பெண்
இவள்தான் என்று தெரிந்து கொண்டார்.
வீடு திரும்பிய பெற்றோர்கள் வீட்டிற்குள்
சிவ வாக்கியர் உடகார்ந்து இருப்பதைப்
பார்த்துவிட்டு திகைத்தபோது, அந்தப்
பெண் நடந்ததைக் கூறினாள்.

பேய்ச்சுரைக்காயும் மணலும் உணவாக்கப்
பட்டதை அறிந்த அவர் ஒரு சித்தராக
இருக்க வேண்டும் என்று கருதினார்.

”அய்யா, நீங்கள் இல்லாத நேரத்தில்
உங்கள் பெண் நான் கொடுத்த
பேய்ச்சுரைக்காயும் மணலை அற்புதமான
உணவு படைத்தாள். எதிர்வாதம் செய்வதை
அறியாத ஒரு பொறுமையான பெண் இவள்
என்பதை அறிந்தேன்.

நான் தவம் செய்வதற்கு துணையாக
இவள் இருப்பாள் என நிரூபித்துவிட்டாள்.
இவளை நான் மணம் செய்ய
விரும்புகிறேன்” என்றார்.

“சுவாமி, நாங்கள் செய்த புண்ணியம் அது,
ஆயினும் எங்கள் குல வழக்கப்படி
திருமணத்திற்குப் பின்பும்
தாங்கள் எங்களுடன் தங்கி இருக்கவேண்டும்” – என்றனர்.

சிவ வாக்கியர் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒப்புக்
கொண்டார். வெண்கலத்தைத் தட்டி ஓசை
எழுப்பி திருமணத்தை அங்கேயே நடத்தி
வைத்தார்கள். குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட
போதும் ஆசைகள் அற்ற, நிலையில்தான் இருந்தார்.

குறவர் குலத்தோடு ஐக்கியமான பின்
அவர்களுக்குரிய வேலைகளான, பாசி பவளமணி
சேகரித்தல், காடுகளுக்குச் சென்று மூங்கில்
வெட்டி முறம் செய்தல் போன்ற வேலைகளை
சிவ வாக்கியர் அவர்களோடு
சேர்ந்து செய்து வந்தார்.

இந்நிலையில் ஒருநாள் மூங்கில் வெட்டுவதற்குக்
காட்டினுள் சென்ற போது, அங்கிருந்த ஒரு பருத்த
மூங்கில் மரத்தினை கண்டு அதனை வெட்டினார்.

அப்படி வெட்டியபோது வெட்டப் பட்ட இடத்திலிருந்து
பொடிபொடியாகத் தங்க துகள்கள் உதிர்வதைக் கண்டு
திடுக்கிட்டு போனார் சிவ வாக்கியர்.

{ வேறு சில குறிப்புகளில், சிவ வாக்கியர்
ஒரு புற்றின் மீது சிறுநீர் கழித்த போது அந்த புற்றின் மண்
பொன்னாக மாறியது… என்றுமிருக்கிறது.
சித்தர்களின் சிறுநீருக்கு இரசவாத தன்மை இருக்கிறது

சில ஆண்டுகளுக்கு முன் வேலூரை அடுத்திருக்கும் ஒரு சிறிய கிராமத்திற்கு ( குடியார்த்தம் என்று எண்ணுகிறேன்)
ஒரு சித்தரை காணச் சென்றிருந்தேன்.
அவருக்கு பெரிய வீடு இருந்த போதும் தோட்டத்தில்
ஒரு சிறு குடிசையில்தான் இருந்தார். அவரிடம்
பேசிக்கொண்டு இருந்த போது தான் படுத்திருந்த
கட்டிலின் கீழிருந்து ஒரு பாத்திரை எடுத்தார்.
அதனுள் சிறிது செப்பு தகடும், தண்ணீரும் இருந்தது.

என்னிடம் கொடுத்து முகர்ந்துப் பார்க்க சொன்னார்.
முகர்ந்து பார்த்த போது எனக்கு இளநீரின் வாசம்
அடித்தது. அவரிடம் இளநீர் வாசகம் வருகிறது.
அப்படியா என்று வாங்கி வைத்துவிட்டு, சில நிமிடங்கள்
என்னை உற்று நோக்கினார். பிறகு மெல்ல’….,
“ அது இளநீர் தண்ணீரில்லை …, எனது சிறு நீர். உள்ளீருக்கும் செப்பு
தகடு சில காலத்தில் மெல்ல பொன்னாக மாறும்…, என்றார்.

முன்னமே இம்மாதிரி விடயங்கள் அறிந்திருப்பதால்
அது குறித்து கேட்காமல்…, நல்லது சாமி, -
இது 24 கேரட் தங்கமா அல்லது 22 கேரட் தங்கமாக என்றேன்.
இல்லை அதனை விட சற்று குறைவான கேரட் தங்கம் - என்றார் ]

”சிவபெருமானே! ஆட்டைக் கொண்டு வந்து காட்டி
வேங்கைப் புலியைப் பிடிப்பது போல் தங்கத்தைக்
என்னை கட்டிப் போட எண்ணுகிறாயா? இது ஆட்கொல்லி
அல்லவா, நான் வேண்டுவது முக்தி! அதனை
விடுத்து புத்தியைத் தடுமாறச் செய்யும் இந்த
யுத்தி வேண்டாம்” என சிவ வாக்கியர் தூரமாய் போய் நின்றார்.

ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.

இதனை அருகில் நின்ற நான்கு இளையர்கள்,
‘அய்யா, மூங்கில் காட்டுக்குள் எதனைக்கண்டு
இப்படி அச்சத்துடன் ஓடி நின்கிறீர்கள்?’’
என்று கேட்டனர்.

‘’ நான் ஒரு மூங்கிலை வெட்டியபோது
அதற்குள்ளிருந்து ஆட்கொல்லி பூதம் வந்தது.
அதனைக் கண்டுதான் பயந்து ஓடிவந்தேன்”
என்று தங்கமிருந்த இடத்தினைக் காட்டினார்.

’சரியான பைத்தியக்காரன் போலும் இவன்.
தங்கத்தின் மதிப்பறியாதவன்” என்று எண்ணி
‘’ஆமாம் ! இது ஆட்கொல்லிதான். உன்னையும்
கொன்றுவிடும். உடனே இங்கிருந்து நில்லாது
ஓடி விடவும்” என்றனர். சிவ வாக்கியர் வீடு
திரும்பிவிட்டார்.

சிவ வாக்கியர் சென்றதை பார்த்த அந்த
நான்கு இளைஞர்களும் தங்கத்தை மூட்டைக்
கட்டினாரகள். அதற்குள் இருட்டி விட்டது.
இரவு வந்த பின் தங்கத்தை ஊருக்குள் கொண்டு
போகலாம் என்று திட்டமிட்டனர். இருவர் பக்கத்து
ஊருக்குப்போய் பசிக்கு ஏதாவது உணவு வாங்கி
வருவதென்றும், மற்ற இருவர் தங்கத்துக்குக்
காவல் இருப்பதென முடிவாகியது.

பக்கத்து ஊருக்கு சென்றவர்கள் மொத்த
தங்கத்தை தாங்கள் இருவரும் பிரித்துக்கொள்ள
எண்ணினர். வாங்கி வரும் உணவில் விஷத்தைக்
கலந்து காட்டிலிருக்கும் இருவரையும்
கொன்றுவிட தீர்மானித்தனர்.

காட்டில் காவலிருப்பவர்கள் அந்தத் தங்கத்தை
தாங்கள் இருவரும் பங்கிட்டுக்கொள்ள
எண்ணம் கொண்டு, அவர்கள் வந்தவுடன் மறைந்திருந்து
தாக்கிக் கொல்ல முடிவு செய்தனர்.

எண்ணியபடி உணவு வாங்கி வந்த நண்பர்களை
மறைந்திருந்து தாக்கிக் கொன்றனர். பிறகு அவர்கள்
கொண்டு வந்த விஷம் கலந்த உணவினை
உண்டு பிணமானார்கள்.

காலையில் மூங்கில் வெட்டவந்த சிவவாக்கியர்
அந்த நான்கு பிணங்களையும் பார்த்து அந்த
ஆட்கொல்லி நான்கு பேரையும் கொன்றுவிட்டதே
என்று வருந்தியபடி அங்கிருந்து அகன்றார்.

முற்றிலும் ஆசை அறுத்த ஞானியாக
சிவ வாக்கியர் இருந்தார். சித்தர்கள் ஞான நிலை
எய்தும்போது இந்த பிரபஞ்ச இரகசியம்
அனைத்தும் திரை அகன்று விடுகிறது.
அகக்கண் விழிக்கும்போது புறக்கண்ணுக்குப்
புலனாகதது எல்லாம் புலப்படுகிறது. பொய்யான ஆச்சாரங்களையும்,போலியான அனுஷ்டங்களை
சிவ வாக்கியர் வெறுத்தார். கடவுள் உன்னுள்
இருக்கிறார் வெளியில் தேடி திரியாதே என்று பாடியுள்ளார்.

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.

சிவவாக்கியர் ஒருநாள் கீரையைப் பிடுங்கும்
போது ஆகாய வீதிவழியே கொங்கணவச்
சித்தர் கனக மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தார்.
சிவ வாக்கியரின் தவ ஒளியால் கவரப்பட்ட
கொங்கணவ சித்தர் அந்தக்காட்டில் கீழே
இறங்க இருவரும் மகிழ்ந்து உரையாடினார்.
சிவ வாக்கியரின் மகா சித்துக்களை நன்கறிந்த
கொங்கணவச் சித்தர். அதன்பின் அங்கே இறங்கி
சிவ வாக்கியரிடம் உரையாடி செல்வார்.
(தொடரும்)
வணக்கம்
அன்பொடு,
கிருஷ்ணன்
சிங்கை

Sunday, September 26, 2010

சித்தர் வழியில்...-சிவவாக்கியர் #1

“ ஓடியோடி யோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாணுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே ‘’

( சிவ வாக்கியரின் புகழ் பெற்ற பாடல். இதயத்துள்ளே இருக்கும் இறைவனைக் காணாமல் கோயிலில் தேடியலைந்து,
இறுதியில் எங்கும் காண இயலாமற் அறியாமையால் மாண்டு
போனார்கள். அவ்வாறு மாண்டு போவனர் எண்ணிக்கை எத்தனை என்று அறிவுறுத்தியவர் சிவவாக்கியர். மூடப்பழக்க வழக்கங்கள்,தீண்டாமை,போலி சாமியார்கள்,அகத்தில் அழுக்குடன் திரியும் மானிடர் கண்டிக்கிறார் )

சிவ வாக்கியர் யோக சித்தரில் சிவயோகியாவர்.
தாயுமானவரால் குறிப்பிடப்படும் பெருமை பெற்றவர்.
இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்கும் கணிப்பு.

இவர் இயற்றிய பாடல்கள் ’சிவ வாக்கியம்’ என
இவர் பெயராலேயே வழங்கப்படுகிறது.
சிவ வாக்கியம் 1012 மொத்தம் பாடல்களாகும்.
இதில் இராமனை புகழ்ந்து பாடியுள்ளார்.
அந்தப் பாடல்கள்தான் இவர் முதலில்
வைணராயிருந்து பின்னர் சைவராக
மாறியமைக்கு சான்று என்று கூறப்படுகிறது.

கார கார கார கார காவலூழி காவலன்
போர போர போர போர போரினின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்களேழு மெய்தஸ்ரீ
ராம ராம ராம ராம ராமவென்னு நாமமே

( கரா கரா என்னும் அடுக்குச் சத்தத்துடன்
போர்களத்தில் கைகளில் ஆயுதம் ஏந்தி நின்ற
புண்ணிய மூர்த்தியும், போரில் அர்ச்சுனனுக்கு
வெற்றி தேடித்தர தேரோட்டியாய்
அமர்ந்தவனும், மராமரங்களாகிய ஏழு
விருட்சங்களை துளைத்து சுக்கிரீவனுக்கு வெற்றி
கொடுத்த விஷ்ணுவின் ஸ்ரீராம ராம என்னும் நாமமே.)

வாலியை கொல்ல இராமன் ஏழு மாமரங்களின்
பின்னால் ஒளிந்திருந்து அம்பெய்தார்.
இதனையே மார மார மார மார மரங்களேழு
மெய்தஸ்ரீ என்னும் வரி குறிக்கிறது

உருவ வழிபாட்டை இவர் சாடியதுண்டு.
பிரமம் எனப்பரம் பொருளையும் பேசுவார்.
இவர் சில சமயங்களில் வெறுப்பில்லாத சைவர்.
சிவனே பரம்பொருள் என்பார். கடவுளின் உயிரின்
வேறாக உளது என்பார். ஆனாலும் கடவுள்
இல்லாமல் உயிரில்லை என்பார்.
கடவுள் ஆன்மாவின் உள்ளத்தில் ஞானமயமாக
நிலவுகிறார் “திருவுமாய் சிவனுமாய்த்
தெளிந்துள்ளோர்கள் சிந்தையால்
மருவி எழுந்து வீசும் வாசனையதாகுவேண்”

எனத் தெளிந்த ஞான நிட்டையுடையயோர்
திருவுள்ளத்தில் மலரின் மணம்போல் தோன்றுவான
இறைவன் என்பார்.. “ உற்றவாக்கையின்று பொருள்
நறுமலர் எழுதரு நாற்றம் போல், பற்றலாவதோர்
நிலையிலாப் பரம்பொருள் ” என்னும்
திருவாசகத்தோடு ஒத்துள்ளதை காணலாம்.

இவர் வேதியர் குலத்தில் தை மாதம் மக
நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆணும் பெண்ணும்
இருவரும் ஏகமனத்தோடு புணர்ந்து விரும்பி செய்கின்றன
போகமாகிய இன்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகிப்
பொருந்துகிறது. உயிர்கள் உடம்போடு தோன்றுவதும்
அவ்வுடல் அழிவதும் எல்லா உயிர்களுக்கும்
பொகிவாகியதால் யாரும் எதுவும் சாவதில்லை;

பிறப்பதும் இல்லை என்ற கருத்துடையவர்.ஆனாலும்
அவரும் இவ்வாறே பிறந்தார் என்பதுவும் உண்மை.
இளம்வயதிலேயே கால தத்துவதை நன்றாக உணர்ந்தவர்.

‘அபிதான சிந்தாமணி’ எனும் நூலில் இவரைப் பற்றிய
கூறப்பட்டுள்ளது. காசிக்குப் போக வேண்டும் என்ற
முடிவெடுத்து தேச சஞ்சாரம் செய்து காசியை
அடைந்தார். மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தும்
பிராணாயாம வித்தை அறிந்து ஒரு செருப்பு
தைப்பதை தொழிலாக கொண்ட ஞானியிடம்
சீடராக சேர்ந்தார். இருவரிடமும் ஈர்ப்பு சக்தி
ஏற்பட்டு நெருங்கிய நண்பர்கள் போல் கலந்தனர்.
சிவ வாக்கியர் தனது மனக்குறையை கூறி
தன்னை ஆதரிக்கும்படி வேண்டினார்.

சிவ வாக்கியரை சோதிக்க “ சிவ வாக்கியா!
என்னிடம் செருப்பு தைத்த கூலிக்குக் கிடைத்த
காசு என்னிடம் இருக்கிறது. இதனை எடுத்துப்போய்
என்னுடைய தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விட்டு வா…..,

அத்துடன் இந்த பேய்ச் சுரைக்காய் ஒரே கசப்பாக கசக்கிறது.
இதன் கசப்பையும் கழுவிக் கொண்டு வா!’ என்றார்.

காசையும் பேய்ச்சுரைக்காயையும் பெற்றுக்கொண்ட
நேராக கங்கை நதிக்கரை வந்தார். கொடுத்த காசை
சுழன்றோடும் ஆற்று நீரின் மேல் வைக்க
நீருக்குள்ளிருந்து இரு வளைக்கரம் வெளியே நீண்டு அந்த
காசைப் பெற்றுக்கொண்டது.

மறு நிமிடம் மறைந்தது. எவ்வித வியப்பும் கொள்ளாது,
தன்னிடமிருந்த பேர்ச் சுரைக்காயை எடுத்து நீரில்
அலம்பிக் கொண்டு போய் சித்தரிடம் கொடுத்தார்.

‘சிவ வாக்கியா, வந்துவிட்டாயா! நான் அவசரப்பட்டு
விட்டேன். நீ கங்காதேவியிடம் கொடுத்த காசு
எனக்குத் திரும்பவும் வேண்டுமே…, இதோ இந்தத்
தோல்பையில் தண்ணீர் இருக்கிறது. அங்கே கொடுத்த
காசை இந்தத் தண்ணீரிடம் கேள்’ என்றார். சிவ வாக்கியர்
எவ்வித சலனமும் இன்றிக் கேட்டார். தண்ணீருக்கு
உள்ளிருந்து ஒரு வளைகரம் நீண்டது. அதன் கரத்தில்
காசு இருந்தது. சிவ வாக்கியர் அந்தக் காசை சித்தரிடம்
கொடுத்தார்.

சித்தர் இதனை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.
‘ எனக்கேற்ற மாணவனாக நீ பரி பக்குவம் பெற்றுள்ளாய் ’
என்று ஆசீர்வதித்தார். அந்த பேய்ச் சுரைக்காயையும்,
கொஞ்சம் மணலையும் கொடுத்து, ‘முக்தி நிலை சித்திக்கும்
வரை நீ இல்லறத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டையும்
எந்தப் பெண் உனக்குச் சமைத்து கொடுக்கிறாளோ
அவளை நீ மணந்து இல்லறம் நடத்துவாயாக’ என்று
ஆசீர்வதித்தார். இத்தனை காலம் அவருக்கு இருந்த
மனக்குறை அதுதான். ஐம்பத்தொரு வயது வரை
திருமணமின்றி இருந்த தனக்குள்
இல்லற நாட்டம் ஏற்பட்டிருந்ததை இவர் எவ்வாறு
அறிந்தார் என்று வியந்தார்.

குருவின் பாதம் தொட்டு வணங்கி அவரிடம் சித்த
உபதேசம் பலவும் கேட்டறிந்து, பின் பிரிந்தார்.
ஒருவருக்கு பெரிய அனுபவமும் அவனுக்கு நடைமுறை
வாழ்க்கையில் ஏற்படும், - உள்ள சூட்சமங்களை அறிந்து,
மக்களுக்கு உபதேசிப்பது அறிவுதான். செல்லும் வழியில் பல அனுபவங்களால் அவர் தவஞானம் அறிவைப் பெற்றார்.

ஆன்மாவால் பெறுகின்ற அற்புதமான சுகத்தை
அளப்பரிய நிலையான இன்பத்தை ஓரே ஒருவரால்
மட்டுமே இந்த உலகத்திற்கு தரமுடியும். அவரே
ஞானகுரு ஆவார். வித்தை கற்றுக் கொடுப்பவர்
வித்யாகுரு. வினைகளை தீர்க்க வந்தவன் ஞானகுரு.

உடம்பால் மனிதன் பெறுகின்ற இன்பம் சரீர
சந்துஷ்டி ஆகும். ஆன்மாவினால் பெறுகிற இன்பம்
ஆத்ம சந்துஷ்டி. இதுவே பேரின்பம் எனப்படுகிறது.
கல்வி நெறியை வரையறை செய்வது யோக சாஸ்திரம்.

சிவ வாக்கியர் ஆதம் தத்துவத்தை அற்புதமான
பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவரது
பாடல் திருவிளக்கமாகத் தோன்றிவர். பாடல்கள்
பெரும்பாலும் திருமந்திர நடையை ஒத்திருக்கும்.
கடவுள் ஆன்மாவின் உள்ளத்தில் ஞானமயமாக நிலவுகிறார்.

எதிர்ப்பட்ட பெண்களிடமெல்லாம் “ இந்தப்
பேய்ச்சுரைக்காயையும் மணலையும் பிசைந்து அமுது
படைக்கும் பெண் உங்களில் யார்?” என்று கேட்டார்.
இளமையும் அழகும் நிரம்பிய சிவ வாக்கியரை
நெருங்கிய பெண்கள் அந்தக் கேள்வியைக் கேட்டதும்
ஓடி ஒளிந்தனர். சிலர் இவரை பித்தர் என்றனர்.
சிலர் புத்தி பேதலித்து விட்டது ஓடி ஒளிந்தனர்.

இதனால் மிகவும் சலித்துப்போன சிவவாக்கியர்
கடைசியாக சிற்றூரில் குறவர்கள் வசிக்கும்பகுதி
வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு
குடிசையின் வாயிலில் கன்னிபெண் ஒருத்தி உட்காரந்திருந்தாள்.

சிவ வாக்கியரை கண்டதும் ஏதோ ஒரு உள்ளூணர்வு
தூண்ட அவரை எழுந்து வணங்கி ஒதுங்கி நின்றாள்.
குடிலின் வாசலில் மூங்கில்கள் பிளக்கப்பட்டு
கட்டுகட்டாகக் கிடந்தது.

எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

Tuesday, September 07, 2010

சித்தர் வழியில்...- குரு நமச்சிவாய சுவாமிகள்-8

''ஆடச் சொல்கிறவர் நாமோ?'' என்றார்.
மீண்டும் அந்த மூவரும்,

'' தாளம் போடுகினறவர்கள் நிற்கவேண்டும்'' என்றனர்.

அப்போது குரு நமச்சிவாயர் அம்பலவாரை நோக்கிப்

'' பெருமானே! தூக்கிய கால் நோகாதோ?
துட்டன் முயலகன் மேல் ஊன்றிய கால் சலியாதோ?

என்று கருத்து அமைய ஒரு வெண்பா இயற்றினார்.
உடனே, நடனம் மிகவும் சிறப்பாக நடைபெறலாயிற்று.

குரு நமச்சிவாயர் மீண்டும் மனமுருகி வெண்பா
ஒன்றினைப் பாட திருநடனம் நின்றது.அதற்கு மேல்
தில்லை மூவாயிரம் கூடி, ''குரு நமச்சிவாயர்
பரிபூரணத்தை அடைந்து காரணமானதால் நாங்கள் பூசிப்போம்'' என்று
சொல்லிக்கொண்டார்கள்.

குரு நமச்சிவாயர் மேல் குடிமக்களும்
'பெருஞ்செல்வரும் வள்ளல் தன்மையுடையவர்களும்,
குறுநில மன்னர்களும், அளவற்ற அன்புக்கொண்டு
அவர் பெயரால் நடைபெறும் அம்பலவாணர்
திருக்கோயில் திருப்பணிக்கு நிறைவான பொருளைக் கொடுத்தனர்.

பல்வேறு அறக்கட்டளைகள் ஏற்பட்டன.
அன்றியும் எழுபத்திரண்டு தம்பிரான்களுக்குப்
பல்லக்கும் விருதும் மற்றும் கொடுத்து நாடெங்கும்
அனுப்பிக் கோயில் திருப்பணிகளும்,
அறக்கட்டளைகளும் விரிவாகவும்
சிறப்பாகவும் நடைபெற வழி வகுக்கப்பெற்றது.

இவ்வாறாக் குரு நமச்சிவாய சுவாமிகள் காலத்தில்
சைவம் தழைத்து ஓங்கிற்து, கோயில் திருப்பணிகள்
விரிவாக நடைபெற்றன.பல்வேறு அறக்கட்டளைகள் உண்டாயின.
குரு நமச்சிவாய மூர்த்தி, தலயாத்திரை பல இடங்களுக்குச் சென்று,
ஆங்காங்குள்ள பெருஞ்செல்வர்கள் தானமாகக் கொடுத்த
பல கிராமங்களைத் திருமடத்தில் நடைபெறும் அன்றாட
தருமங்களுக்காவும் அம்பலக் கூத்தர் திருக்கோயிலில்
நடைபெறும் சர்வ கட்டளைக்காகவும் சிலாசனம் செய்து
வைத்தார். இவ்வாறாகப் பல சிவ தருமங்கள் சிறப்பாக நடைபெற
வழிவகுத்த பின்னரும் பல்லாண்டு வாழ்ந்திருந்து, திருப்பெருந்துறை
சென்று அங்கே இலிங்காரம் ஆயினர்.

''வத்தீச் சுரவருடம் வைகாசி தேதிநவம்
இந்துநா னாழிகை யேழரைமேல் - வந்தகுரு
தானா மருணகிரி தாணுசிவ லிங்கத்துள்
ஆனால் நம்ச்சிவா யன்.."

குரு நமச்சிவாயர் அம்பலக் கூத்தருக்கு
அளித்த நிலங்கள் அணிகலன்கள்,
தோப்புகள் பற்றிய கல்வெட்டுகள்
தில்லைக் கோயிலிலும் பிற இடங்களிலும்
மிகுதியாகக் காணப்படுப்படுகின்றன
என்று சொல்லப்படுகிறது.
-- நிறைவு --
<><><><><><><><><><><><><><><><><><><>

செவிவழி கேட்ட ஒரு செய்தி.
தில்லை [சிதம்பரம்] கோயிலுள் ஒரு சுரங்கம்
உண்டு எனவும், அந்நியர் படையெடுப்பின்போது
பொன், தங்க ஆபரணங்கள், நவரத்தின கற்கள்
யாவும் அங்குதான் மறைத்து வைக்கப்பட்டது எனவும்,
இன்னும் அந்தச் சுரங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த சுரங்கள் பற்றிய இரகசியம்,
அதன் உள்ளடக்கம் யாவும் கோயில் தலைமை
குருக்கள் ஒருவருக்கு மட்டும் தெரியும் என்றும்-
அவர் ஒருவர்தான் செல்ல அனுமதியுண்டு என்றும் -
மற்றவர்களுக்கு இந்த இரகசியம் சொல்லக்கூடாது
என்ற இரகசிய காப்புறுதி உண்டு என்றும்
சொல்லப்படுகிறது....??? !!!

தெரிந்த அன்பர்கள் விபரம் கூறலாம்.
இது சிதம்பர இரகசியம் அல்ல.
ஒருகால்.... இதுதான் சிதம்பர இரகசியமோ....!

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர்களின் வழியில்...-குரு நமச்சிவாய சுவாமிகள்-7

'சபாநாயகர் பிச்சை கொடுத்தால் கட்டளை
எப்போதும் தொடந்து நடைபெறும்'
என்று சொல்லிக்கொண்டே பொற்றாம்பாளத்தைக்
கையில் ஏந்தி
''காத லுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய
பாத மலர்ப்பூசை பண்ணவே - ஓது
குருவா யெனையாண்டு கொண்டவனே! பிச்சை
தருவாய் சிதம்பர நாதா''
என்ற வெண்பாவைப் பாடினார்.

அப்போது குரு நமச்சிவாயர் வேண்டுளுக்கிணங்கி
அங்கு வந்திருந்த அடியார்களும் அன்பர்களும்
காணுமாறு தங்ககாசு ஒன்று தட்டிலே வீழ்ந்தது.

''நடராசப்பெருமானே நாம் அனைவரும்
காணுமாறு பிச்சையிட்டார். ஆகவே நாமும்
நன்கொடையளிக்க வேண்டும்'' என்று வந்திருந்த
பெரும்பான்மையினர் பொன்னும்,பொருளும் போட்டார்கள்.

குரு நமச்சிவாயர் தங்கத் தட்டினைத் தனக்கு
முன்னிருந்த அர்ச்சர்களிடம் கொடுத்து அவ்விடத்தை
விட்டு புறப்பட்டார். அப்போது சிறிது தாங்கிற்று.

உடனே குரு நமச்சிவாயர் ''இதற்குக் காரணம் என்ன?''
என்று மூவாயிரவரைக் கேட்டார். அதற்கு அவர்கள்
''நாங்கள் ஏதும் அறியோம்''என்றனர்.

குரு நமச்சிவாயர் யோகக் கண்கொண்டு நோக்கினார்.
மூவாயிரைவரை நோக்கி,சுவாமிக்கு
அணிகலன் இருந்ததுண்டா? என்று வினாவினார்.
அவர்கள்''இல்லை'' என்றனர்.

பின், சிறிது நேரம் சிந்தைனை செய்து
''பதஞ்சலியாக்கிர பாதர்காலத்தில்
பாதச்சிலம்பும் கிண்கிணியும் இருந்தன' என்று சொல்வார்
யாம் கண்டதில்லை என்றார்கள்.
அவர் தம் கூற்றினைக் கேட்ட குரு நம்ச்சிவாயர்,
சிற்பிகளை அழைப்பித்துப் ''பாதச்சிலம்பும் கிண்கிணியும்
விரகண்டா மணியும் செய்யவேண்டும்,
அவற்றைச் செய்ய எவ்வளவு பொன் தேவைப்படும்''
என்றார்.

சிற்பிகள்'' அவற்றைச் செய்ய ஐம்பதினாயிரம்
பொன் தேவை'' என்றனர்.

வந்து சேர்ந்திருக்கின்ற பொன்னையும் பொருளையும்
கொடுத்துத் திருவாபரணம் செய்து முடிக்குமாறு
சிற்பிகளிடம் கூறி அனுப்பிவிட்டு
திருக்கோயிலின் ஒருபுறத்தே அமர்ந்திருந்தார்.

அப்போது தில்லை மூவாயிரவர்கள் ஒன்று
சேர்ந்து ''நாம் அனைவரும் இவரைத்
துணையாகக்கொண்டு நல்வாழ்வு வாழலாம்
என்று நினைத்திருந்தோம்.செல்வத்தை எல்லாம்
சிலம்பும், கிண்கிணியும் வீரகண்டாமணியும்
செய்யக் கொடுத்துவிட்டாரே!'' என்று
குரு நமச்சிவாயர் மேல் குறைகூறிப் பேசினார்.

அன்றியும்''சிலம்பும் கிண்கிணியும் வீரகண்டா
மணியும் அணிந்துவிட்டால்,அம்பலவாணர்
இவருக்கு நடனம் செய்து காட்டுவரோ?''
என்று ஏளனமாகப் பேசினர்.

இவர்தம் உரையாடல் குரு நமச்சிவாயர்தம்
செவியில் பட்டது. இவர்தம் நிலை இவ்வாறு
இருப்ப, நாற்பதாம் நாள் சிலம்பும் கிண்கிணியும்
செய்யபெற்று வந்து சேர்ந்தன. அப்போது
குரு நமச்சிவாயர் தில்லை மூவாயிரம் பிறரையும்
அழைத்து,இப்போது தில்லை அம்பலக்கூத்தன்
நடனம் செய்து காட்டினால் அவைவரும்
காண்பீரோ?'' என்றார்.

அங்கிருந்தார் அனைவரும் ''அம்பலவாணர்
திருக்கூத்தினைக்காண எத்தனை பிறவிகளில்
நாங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்ம்.
மூவேழ்தலை முறையினரும் கரையேறிவார்களே!
என்றார்கள்.

குரு நமச்சிவாய மூர்த்தி நடராசப்பெருமான்
திருவடிகளில் சிலம்பும் கிண்கிணியும் அணிந்து
தரிசனம் செய்யுமாறு சொல்லியபின்
இறைவன் திருநடனத்தை காண் விரும்பினராய்,
''அம்பலவா ஓர்கால் அடினால் தாழ்வாமோ
உம்பாரெல்லாம் கண்டதென கொப்பாமோ - சம்புவே
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஒத்துப் பதஞ்சலிக்கு மோ''
என்ற பாட்டினை பாடினார். உடனே கல கல வென்றொரு
ஓசை கேட்டது. குரு நமச்சிவாயர் நின்று தோத்திரம்
செய்வாராயினர்.

தில்லை கூத்தன் நடனம் செய்யத் தொடங்கினார்.
எல்லோரும் கீழே விழுந்து வணங்கி அசைவற்றிருந்தார்கள்.
அப்போது மூவாயிரவருள் மூன்று பேர்
''நீண்ட நேரமாகத் திருநடனம் நிகழ்கிறபடியால்
நடனத்தை நிறுத்தவேண்டும்'' என கூறக்
குரு நமச்சிவாயர், ''ஆடச் சொல்கிறவர் நாமோ?''
என்றார். மீண்டும் அந்த மூவரும், '' தாளம் போடுகினறவர்கள்
நிற்கவேண்டும்'' என்றனர்.

அப்போது குரு நமச்சிவாயர் அம்பலவாரை
நோக்கிப் ''பெருமானே! தூக்கிய கால் நோகாதோ?
துட்டன் முயலகன் மேல் ஊன்றிய கால் சலியாதோ?
என்று கருத்து அமைய ஒரு வெண்பா இயற்றினார்.

உடனே, நடனம் மிகவும் சிறப்பாக நடைபெறலாயிற்று.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர்களின் வழியில்...- குரு நமச்சிவாய சுவாமிகள்-6

அப்போது குரு நமச்சிவாயர், அன்னை சிவகாமசுந்தரியைச் சிந்தனை செய்தார். அன்னம் வந்தது! முதிய அடியவரை நோக்கி ''இதனை ஏற்றுக்கொள்ளும்''என்றார்.

அப்போது அம்பலத்தாடுவார், 'நாம் இதனை
ஏற்றுக்கொள்ளோம்' என்றார். குரு நமச்சியாவர்
''காரணம் என்ன?'' என்று வினாவ, அடியவர்,
''ஐயா! இவ்வாறே ஒவ்வொரு நாளும்
உணவளிப்பதாக உறுதி கூறினால்
ஏற்றுக்கொள்வோம், இன்றேல்
ஏற்றுக்கொள்ளோம்'' என்றார்.

அது கேட்ட குரு நமச்சிவாயர்,
''நீர் மிகவும் மூப்படைந்திருக்கின்றீர்!
யானோ, இன்று இவ்வூரில் இருக்கிறேன்,
நாளை காசியோ, இராமேசுவரமோ அறியேன்;

இவ்வாறு இருப்ப உமக்கு நித்தியம்
அன்னம் கொடுக்கிறோம் என்று எவ்வாறு
கூற இயலும்?'' என்றார்.

அப்போது அம்பலத்தாடுவார்,
''ஐயா! நீர் செல்லும் திசைகளில் யாம்
உமக்கு முன்னே நடந்தால் அன்னம் கொடும்.

உமக்குப் பின்னால் நடந்தால் அன்னம்
வேண்டாம் என்றார். அப்போது, குரு
நமச்சிவாயர், 'நீர் முன்னே நின்றால்
அன்னம் கொடுக்கிறேன், இன்றேல் இயலாது'' என்றார்.

அம்பலத்தாடுவாரும் அதற்கு இசைந்தார்.
ஆகவே குரு நமச்சிவாயர் சுவாமியை பார்த்து
''உணவு கொள்ளும்''என்றார். அதற்கு அவர்,
' திருநீற்றுக் கோயிலையும் உருத்திராக்கத்தையும்
தொட்டு உறுதி கூறிக்கொடுத்தால் கொள்வோம்'' என்றார்.

குரு நமச்சிவாயர் அவ்வாறே செய்ய,
வந்த அடியவர் கொடுத்த அமுதைக்
கொள்வது போல் காட்டி,
''நீர் வேட்கை தணியுமாறு தண்ணீர் தரவேண்டும்'' என்றார்.

குரு நமச்சிவாயர் அருகிலிருந்த திருப்பாற்கடல்
எனப்படும் நீர் நிலைக்காட்டி,''அதன்கண் நீர் அருந்துக!''
என்றார். அவ்வாறே நீர் அருந்தச் செல்பவர்
போல் காட்டி மறைந்தருளினார்.

மறைந்தருளிய அம்பலத்தாடுவார்
தில்லை மூவாயிரவரிடம், 'நாம் சென்று
குரு நமச்சிவாயன் கோயிலுக்குள்
வருவதற்குரிய வழியை வகுத்து விட்டோம்,
நீவீர் அனைவரும் கூடி விருதுகளுடனும்
நாம் ஏறும் பல்லக்கு உடனும் சென்று,
வீதிவலமாக நம்மிடம் அழைத்து வருக!'' என்றார்.

அவ்வாறே தில்லை மூவாயிரவரும் சென்று
வணங்கிப் பல்லக்கில் ஏறுமாறு வேண்டினர்.
குரு நமச்சிவாயரை நோக்கி,
''சுவாமி! இது பல்லக்கன்று, சூன்ய
சிங்காசனம் என்றனர்.

அப்பொழுதும் குரு நமச்சிவாயர் மறுத்துவிட்டார்.

பிறகு மூவாயிரம், '' ஐயனே! நேற்று
நண்பகலில் எம்பெருமான் உம்மிடம்
வந்தார் அல்லவா, நீர் அவரிடம் யாது
கூறினீர்'' என்றார்கள்.

குரு நமச்சிவாயர் யோகக்
காட்சியினால் பார்த்தார்.
சபாபதியின் காட்சி கிடைத்தது.
''சபாநாயகர் இவ்விடத்தில் வந்து
என்னுடன் உடையாடி அங்கும் சென்று
செய்தி கூறினரோ!'' என்று பரமன் அருளைப்பாராட்டி,
சங்கயமாய் அம்பலவர் தாமே எழுந்தருளி
யிங்கெமக்குப் பிச்சை யிடுவென்ன-வங்கமுது
திட்டமு டன் நமக்கு நீதினமு மேசர்வ
கட்டளையுண் டாக்குகென்றார் காண்''
என்ற வெண்பாவைப் பாடிக்கொண்டே
பல்லாக்கில் ஏறி, அல்லாகிய இருவினை
தனையறுத் தடியினை தருவாரோ?

மல்லல் நீடிய புவியின் மேலின்னமும்
வரும் பிறப்பறுப்பாரோ? நல்ல மாமுலை
மாதுமை நாயகர் நாயகர் நான் நிதம்
நவின்றேத்தும் தில்லைநாயகர்
அம்பலத் தாடுவார் திருவுளம்
தெரியாதோ! என்ற ஓதிக்கொண்டே
கோயிலுக்குட்குச் சென்று கொடி மரத்தருகே
பல்லாக்கில் இருந்து இறங்கிப் பஞ்சாக்கரமதில்
மட்டும் பாதக்குறடு இட்டு சென்றார்.

பிறகு பொன்னம் பலத்தை அணுகி,
திருநடம்புரி தேசிகனை வணங்கி தில்லை
மூவாயிரவரைப் பார்த்து, இப்போது நாம்
உண்டாக்க வேண்டிய கட்டளையாது!'' என்று
வினவினார்!

அப்போது சபாநாயகர்,''சர்வ ஜனத்துக்கும்
சர்வ கட்டளை என்று அசரீயாய் நின்று
உணர்த்தினார். ''சபாநாயகர் பிச்சை கொடுத்தால்
கட்டளை எப்போதும் தொடந்து நடைபெறும்''
என்று சொல்லிக்கொண்டே
பொற்றாம்பாளத்தைக் கையில் ஏந்தி
''காத லுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய
பாத மலர்ப்பூசை பண்ணவே - ஓது
குருவா யெனையாண்டு கொண்டவனே! பிச்சை
தருவாய் சிதம்பர நாதா''
என்ற வெண்பாவைப் பாடினார்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர்களின் வழியில்...-குரு நமச்சிவாய சுவாமிகள்-5

அவ்வாறே அர்ச்சகர் மூவரும் குரு நமச்சிவாயரை
அவ்விடத்தில் கொண்டு போய் விட்டுத்திரும்பினர்.
அங்கே யோகத்தில் இருக்கும்போது நமச்சிவாயருக்குப்
பசியுண்டாயிற்று. அப்போது,
'' ஊன்பயிலும் காயம் உலராமல் உன்றனது
வான்பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் - தேன்பயிலும்
சொல்லியல் நல்லார் துதிக்கும் சிவகாம
வல்லியே சோறு கொண்டு வா.
-- என்ற இவ்வெண்பாவினைச் சொல்லினார்.
உடனே சிவகாமி அம்மையார் அமுது கொண்டுவந்து நின்று,
'' கொண்டுவந்தேன் சோறு குகை நமச்சி வாயரது
தொண்டர் அடியார் சுகிக்கவே - பண்டுகந்த
பேய்ச்சிமுலை யுண்ட பெருமாளுடன் பிறந்த
நாச்சி சிவகாமி நான்...''
என்ற வெண்பாவினைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறாகவே, சிவகாமசுந்தரி தேவியார்
குரு நமச்சிவாயருக்கு ஒவ்வொரு நாளும்
அன்னம் அளிக்க குரு நமச்சிவாயர்
யோகத்தில் இருந்து வந்தார்.

இவ்வாறாக இவர், சிவயோகத்தில்
இருக்கிற காலங்களில் இவரை காணவரும்
அன்பர்கள் பொன்னையும் பொருளையும்
எதிரில் வைத்துவிட்டுச் சென்றார்கள்.

அவற்றைக் கண்ட குரு நமச்சிவாயர்,
''இவை இவ்விடத்திற்கு என் வந்தன?
இவை ஆட்கொல்லி, இங்கு இது வேண்டாம்''
என்று அந்த நேரத்தில் இருந்தவர்களை
எடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டு விடுவார்.

இவற்றை கண்ட தில்லை மூவாயிரம்
''இவ்வளவு செல்வமும் வீணாகிறதே!''
என்று தம்முடன் கூடிப்பேசிக்
குரு நமச்சிவாயர் இடம் சென்று,
''சுவாமி, நீர் இவ்விடத்தில் இருப்பதனால்,
அன்பர்கள் தரும் பொருள்கள் வீணாகின்றன.
திருக்கோயிலின் உள்ளே வந்து தங்கினால்,
எல்லாப் பொருளும் பல்வேறு வகையான
திருப்பணிகள் செய்வதற்குப் பயன்படும்.
பல கட்டளைகள் நடைபெற வழியுண்டாகும்''
என்று வேண்டிக்கொண்டனர்.

அப்போது குரு நமச்சிவாய தேவர்,
அர்ச்சகர்களை நோக்கி. ''நாம் நமது
குருவின் ஆணைப்படி இவ்விடத்தில்
வந்திருக்கிறோம். ஆதலால் யாம் அங்கு
வர இயலாது'' என்று மறுத்துவிட்டார்.

உடனே, தில்லை மூவாயிரவருள் சிறப்புற்றிருந்த சீவன்முத்தர்,சடாமுத்தர், மகாமுத்தர் ஆகிய
மூவரும் அம்பலத்தாரிடம் சென்று,
''பெருமானே! குரு நமச்சிவாய மூர்த்தி
கோயிலுக்குள்ளே வந்தால் பல திருப்பணிகள்
நடைபெறவும், பல அறக்கட்டளைகள்
தொடர்ந்து நடைபெறவும், வழியுண்டாகும்.''
என்று சொன்னார்கள்.

''நன்று, நீவீர் சென்று அழைத்தால் வாரார்
யாமே சென்று அழைப்போம்'' என்று கூறி,
மூப்பு நிறைந்த அடியவராய்த் தண்டு
கமண்டலம் பிடித்துக் கொண்டு திருப்பாற்கடல்
என்னும் இடத்திற்கு வந்து
குரு நமச்சிவாய மூர்த்தியின் எதிரே நின்றார்.

குரு நமச்சிவாயர்யோகம் தெளிந்து முன்
நிற்பவரைப் பார்த்தார். கண்ணுற்றவுடனே,
''ஐயனே!போற்றி'' என்றார். வந்து நின்ற வரும்
''போற்றி போற்றி''என்றார்.

குரு நமச்சிவாயர், வந்து நின்ற முதுமை
நிறைந்த அடியாரைப் பார்த்து,
''ஐயா! நீங்கள் இருப்பது எந்த ஊர்?'' என்றார்.
அவர் ''நாம் இருப்பது தில்லைவனம்'' என்றார்
உம்முடைய பெயர் என்ன?'' என,
''எம் பெயர் அம்பலத்தாடுவார்'' என்றார்.

''நீர் என்ன அலுவலாக இங்கு வந்தீர்''
என்று கேட்க எனக்கு அன்னம் தேவையாக
இருக்கிறது; இவ்வூர் எங்கும் சுற்றினேன், அன்னம் கிடைக்கவில்லை, இவ்விடத்தில் அன்னம்
கிடைக்கும் என்று சொல்லினர்.
ஆகவே,உம்மிடம் வந்துள்ளேன்'' என்றார்
முதியராய் வந்து நின்ற அடியவர்.

அப்பொழுது குரு நமச்சியாவாய மூர்த்தி,
''ஐயா! என்னிடம் அன்னம் இல்லை.
எனக்குச் சிவகாசுந்தரி அம்மையார்
உணவளித்து வருகிறார். எம்மிடம்
பாத்திரம் கூட இல்லை'' என்று சொல்லினார்.

அப்போது வந்த முதியவர் ''சுவாமி! என்னிடம்
பாத்திரம் இருக்கிறது'' என்று சொல்லிச்
சந்திரனைப் பாத்திரமாக வைத்தார்.

அப்போது குரு நமச்சிவாயர், அன்னை
சிவகாமசுந்தரியைச் சிந்தனை செய்தார்.
அன்னம் வந்தது! முதிய அடியவரை நோக்கி ''இதனை ஏற்றுக்கொள்ளும்''என்றார்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

Monday, September 06, 2010

சித்தர்களின் வழியில்...- குரு நமச்சிவாய சுவாமிகள்-4

'கருணை கடலே! இரண்டு அம்மையார்
ஆக கூடுமே'' என்று சொல்ல அம்மையார்
''அதனால் பிழை ஒன்றும் இல்லை பாடுக!
என்றார். உடனே குரு நமச்சிவாயர் பின்வரும்
வெண்பாவினைப் பாடி மகிழ்ந்தார்.

''முத்தநதி சூழும் முதுகுன் றுறைவானே
பத்தர் பணியும் பதத்தாளே! அத்தர்
இடம்தாளே மூவா முலைமேல் எழிலார
வடத்தாளே சோறுகொண்டு வா...''

இவ்வெண்பாவைச் சொல்லியவுடன்
அம்மையார் பாலாம்பிகையாய்ச் சோறு
கொண்டு வந்து கொடுத்தார்.
அதனையுட்கொண்டு வழிநடந்து புவனகிரிக்கு
வந்து ஆனந்தத் திருநடனம் புரியும்
ஐயன் தில்லை அம்பலவாணப் பெருமான்
எழுந்தளியிருக்கும் தில்லைத் திருக்கோயில்
கோபுரம் கண்டு வணங்கி,

'' கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டில் குற்றமெலாம்
தீபரந்த பஞ்சதுபோல் சென்றதே - நூபுரங்கள்
ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம்
பார்க்கின்றார்க் கென்ன பலன்...''

என்ற இவ்வெண்பாவைக் கூறிகொண்டே
சிதம்பரம் சென்று திருக்கோயிலுட் புகுந்து,
சிவகங்கையில் நீராடி,

''கண்டமட்டில் கண்ட வினை காதம்போம்
கையிலள்ளி கொண்டமட்டில் கொண்டவினை
வண்டமிழ்சேர் வாயார வேபுகழும் வண்ணச் சிவகாமித்
தாயார் திருமஞ் சனம்....''

என்ற வெண்பாவினைச் சொல்லிக் கொண்டே
கனக சபைக்கு முன்சென்று பெருமானை
வணங்கும் போது, கூத்தப் பெருமான், அண்ணாமலையில்
குகைக்கண் அமர்ந்திருக்கும் குகை நமச்சிவாயரைப்
போலவே காட்சி கொடுத்தார்.

அப்போது வாழ்த்தி வணங்கி நின்று,

''திருவண்ணா மலையிற் குகை
நம சிவாய தேசிக வடிவமா யிருந்து
கரவனா மடியேன் சென்னிமே லுனது
கழலினை வைத்தவா நுறுரேன்
விரகின் நாரியரைப் புதல்வரை பொருளை
வேண்டிய வேண்டிய தனைத்தும்
பரவினார் புகழ்வார்க் களித்திடும் பொன்னம்
பலவனே பரமா சிரியனே...''

என்ற பாடலை முதலாகக் கொண்டு தொடங்கி,
ஒரு நாழிகை அளவிற்குள் நின்ற இடத்திலேயே,
உலகத்தை மறந்து நின்று,

''என்று வந்தாய் எனும் எம்பெருமான்' என்ற
திருக்குறிப்பில் ஒன்றி இருந்து நூறு
பாடல்களைப் பாடினார். பிறகு ஓர் அறையில்
அமர்ந்து சிவயோகத்தில் அமர்ந்தார்.

அந்நாளில் தில்லை மூவாயிரவருள்,
சீவன்மூத்தர், சடாமுத்தர். மாகமுத்தர்
என்ற மூவர் என்ற மட்டும் பல்லக்கேறும்
தனிச்சிறப்புடையவர்களாக இருந்தனர்.

அவர்கள் கனவில் ஆடல் அழகராகிய
அம்பலவாணப் பெருமான் தோன்றி,
''திருவண்ணாமலையில் இருந்து ஞானி
நம் திருநகரில் வந்து தங்கியிருக்கிறார்;
அவர் சிவயோகத்தில் மிகுதியாக ஈடுபட்டிருப்பவர்.

அவருக்குத் தனிமையான இடத்தினைத் தருதல்
வேண்டும். அவரால் நமக்குப் பற்பல பணிகள்
நடைபெற இருக்கினறன. அவருக்கு தகுதியான
இடத்தினை தருதல் வேண்டும் நாம் இருமுறை திருவடி வைத்திருக்கின்றோம்.

அவ்விடத்தில் குரு நமச்சிவாயரைக் கொண்டு
போய் விடுவீராக" என்று திருவாய் மலர்ந்தளினார்.
அவ்வாறே அர்ச்சகர் மூவரும் குரு நமச்சிவாயரை
அவ்விடத்தில் கொண்டு போய் விட்டுத்திரும்பினர்.
அங்கே யோகத்தில் இருக்கும்போது நமச்சிவாயருக்குப்
பசியுண்டாயிற்று. அப்போது,

கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர்களின் வழியில்...- குரு நமச்சிவாய சுவாமிகள்-3

அதனைக் கேட்ட அர்சசகர்களும் பிறரும்
இறைவனை வாழ்த்தி அவ்விடம் சென்று
தாம்பாளத்தைக் கண்டெடுத்துக் கொண்டு
அண்ணாமலைக்கு வந்து சேர்ந்தனர்.

மறுநாள் பகலவன் தோற்றமாகும் போது
குரு நமச்சிவாயர் எழுந்து தன் ஞானாசிரியைத்
தொழுது கிழக்கு நோக்கிச் செல்லும்போது,
இருடிவனம் என்பதொரு திரு நகரினைக் கண்டார்.

அந்நகரில் அம்மையும், அப்பனும் அர்த்தநாரீஸ்வர
வடிவத்தில் எழுந்தருளியுள்ளனர். அவ்வடிவம்
அகத்திய முனிவரால் பூசிக்கப் பெற்றதாகும்.
அங்கு ஐயாயிரம் கொண்டான் என்றொரு
புனிதத் தீர்த்தம் உண்டு.

அதில் நீராடி பூசை முடித்துத் தூயமனத்துடன்
சுவாமியை துதித்துச் சிவயோகத்தில் இருக்கும்போது
பசி வந்தது.

அப்போது, அன்னை பராசக்தியை நோக்கி,
''தாயிருக்கப் பிள்ளை தளருமோ தாரணியில்
நீயிருக்க நான் தளர்தல் நீதியோ - வேயிருக்கும்
தோளியோ விண்ணோர் துதிக்கும் திருமுத்து
வாளியே சோறுகொண்டு வா''

என்று ஒருவெண்பாவினை இயற்றினார்.
அம்மை அதனைத் திருச்செவியில் ஏற்று
''குருநமச்சிவாயா! நான் இடப்பாகம் பிரியாமல்
இருப்பவும் நீ என்னை பிரித்துப் பாடியது
முறையோ?

இப்போது உன் வாக்கினால் சேர்த்துப்
பாட வேண்டும்'' என்று கூற,
குருநமச்சிவாயா மூர்த்தி,

'' மின்னும் படிவந்த மேக களத் தீசருடன்
மன்னும் திருமுத்து வாளியே - பொன்னின்
கவையாளே! தாயே! என் கன்மனத்தே நின்ற
மலையாளே சோறு கொண்டு வா''

என்று ஒரு வெண்பாவைவினால்
சேர்த்துப் பாடினார்.உடனே அம்மையார்
அமுதுகொண்டு வந்து கொடுத்தார்.
அதனை உட்கொண்டு புறப்பட்டு
விருத்தாசலம் வந்து பழமலை
நாதரையும் பெரியநாயகி அம்மையையும்
வழிபட்டு ஒரு குளக்கரையில்
சிவயோகத்திலிருக்கும் போது பசி அணுகிற்று.

அப்போது,

''நன்றிபுனை யும் பெரிய நாயகியெ நுங்கிழத்தி
என்றும் சிவன்பா லிடக்கிழத்தி - நின்ற
நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறுகொண்டு வா...''

-என்ற வெண்பாவைப் பாடினார்.

அம்மையார் தண்டூன்றி விருத்தாம்பிகையாய்
வந்து, குரு நமச்சிவாயாரைப் பார்த்து,
''என்னப்பா! உன்னுடைய சொல்லினால் என்னைக்
கிழத்தி கிழத்தி என்று பாடுதல் நலமா?

கிழவிக்கு நடக்க இயலுமா? தண்ணீர் எடுக்கக்
கூடுமோ? உகட்டுப்பட்டு, உணவு கொண்டு வர
உடலில் உரம் இருக்குமோ? என்றார்.

உடனே, குரு நமச்சிவாய தேவர்
''அன்னையே! ஆண்ட கோடி ஈன்ற பின்னும்
கன்னி என மறைபேசும் ஆனந்த ரூப மயிலே!
பாலகாசியில் பாலாம்பிகை; இது விருத்தகாசி;
நீர் பெரிய நாயகி; இங்குள்ள
இறைவனும் பழமலை நாதர்;

அதுபற்றியே யான் அவ்வாறு சொல்லினேன்'' என்றார்.
அடியவர் கூறியன கேட்ட அம்பிகை
'' என அருமை மகனே! நமச்சிவாயம்!
உன்னுடைய இனிய வெண்பாவிலே என்னை இளமையாக
வைத்துப் பாடுக!'' என்றார்.

குரு நமச்சிவாய தேவர் ''கருணை கடலே!
இரண்டு அம்மையார் ஆக கூடுமே'' என்று
சொல்ல அம்மையார் ''அதனால் பிழை
ஒன்றும் இல்லை பாடுக! என்றார்.

உடனே குரு நமச்சிவாயர் பின்வரும்
வெண்பாவினைப் பாடி மகிழ்ந்தார்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

Thursday, September 02, 2010

சித்தர்களின் வழியில்...- குரு நமச்சிவாய சுவாமிகள் -2

அருகிலிருந்த குரு நமச்சிவாய மாணவ சீடன்,
''சுவாமி! குறை வெண்பாவையும் முடிக்கலாமே''
என்றார். அப்போது குகை நமச்சிவாயர்.

''அப்பா நமச்சிவாயம்! எஞ்சியுள்ள அரை
வெண்பாவையும் நீயே முடிப்பாயாக!''என்றார்.
ஆசிரியர் கூறியன கேட்டசீடன், ''பெருமானே!
குருவின் வாக்கிற்கு அடாத எதிர்வாக்கினை
அடியேன் கூறுதல் பொருந்தாதே'' என்றார்.

அப்போது குரு '' நீ அருள்நிறை மாணவன்,
ஆதாலால் எஞ்சிய வெண்பா அடிகளைப்
பாடுக!'' என்றார்.

அப்போது மாணவர், நல்லாசிரியன்
கட்டளைக்கு கட்டுப்பட்டு,
''சால்வன
செய்யா வொருத்தாருடன் சேர்ந்து மிருப்பீரோ
வையா நமசிவா யா'' -- என்று முடித்தார்.

அருள்நிறை மாணவரைப்பற்றி அறிய
வேண்டுவனவற்றை தெளிவாக அறிந்துகொண்ட
ஞானாசிரியர், ''அப்பனே! நமசிவாயம்! உனக்கு
ஒப்பான மாணவனை எங்கும் காண்டல் அரிது;

ஆகையால் இன்றுமுதல் நீ குரு நமச்சியாய
மூர்த்தி எனத் திருப்பெயர் பெற்றாய்!'' என்று
தழுவிக்கொண்டு,''என் கண்ணுட் கருமணியே!''
ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுதல்
கூடாது; ஆகையால் அறியாமையை நீக்கி
அறவொளியை வழங்கும் அம்பலவாணர்
எழுந்தளிருயிருக்கும் திருத்தில்லை எனப்பெறும்
சிதம்பரத்திற்குச் செல்க! அங்கு உம்மால்
நடைபெற வேண்டிய பல திருப்பணிகள்
உள்ளன'' என்று கட்டளையிட்டார்.

அப்போது குரு நமச்சிவாயர் ஞானாசிரியரை
நோக்கி, ''ஐயனே! ஞானாசிரியர் திருவடிகட்குப்
பணி செய்யும் பேற்றினை இழந்து, நாள்தோறும்
செய்யும் குரு தரிசனத்தை இழந்து வேறொரு
நகர்க்கு எவ்வாறு செல்வேன்'' என்றார்.

குகை நமச்சிவாயர் மாணவரை நோக்கி,
''நீர் பெருமான் எழுந்தளியிருக்கும் சிதம்பரத்திற்குச்
சென்று பொன்னம்பலத்தின் முன்னே நின்று
கூத்தப்பெருமானை வணங்கி நிற்பீராக!

அங்கே, அப்பெருமான் நம்மைபோல்
தரிசனம் கொடுத்தால் இருப்பீராக;
இன்றெல் இவ்விடம் வந்து சேர்க!''
என்று சொல்ல. மாணவர்,''நன்று! என்று
நவின்று பத்துப்பாடல்களால் ஆசிரியர்க்கு
வணக்கம் தெரிவித்து நினறார்.

ஆசிரியரிடமிருந்து ''புறப்படலாம்'' என்ற சொல்
பிறந்தது. உடனே குரு நமச்சிவாயர் தனியாக
சாயுங்கால் நேரத்தில் புறப்பட்டுக் கிழக்கு நோக்கி
ஒரு காத தூரம் நடந்தார். இருள் வந்தது.

அங்குத் தகுதியானதொரு இடம் பார்த்து ஒரு
ஆலமரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார்.
பின் பசி மேலிட்டு, உண்ணாமுலை அம்மையாரை
நோக்கி ஒரு வெண்பா பாடினார்.

''அண்ணா மலையா ரகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே- நண்ணா
நினைதொறும், போற்றிசெய நின்னடிய ருண்ண
மனை தொறும் சோறுகொண்டு வா...''

எனறு குரு நமச்சிவாய சுவாமிகள்
இவ்வண்பாவினைப் பாடிய நேரத்தில்,
அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப் பொங்கல்
செய்து பொன்தபாளத்தில் இட்டு நிவேதித்துக்
கோயிலில் வைத்து அதனை எடுத்துச் செல்ல
மறந்தவராய்க் காப்பிட்டு அர்ச்சகர் முதலியோர்
அவரவர் வீடு சேர்ந்தனர்.

அதனை அறிந்த உண்ணாமுலைத் தாயார்
அந்நிவேதனத்தைத் தட்டுடன் கொண்டு வந்து
குரு நமச்சிவாயமூர்த்திக்குக் கொடுத்துவிட்டு சென்றார்.

விடிந்தபின் அர்ச்சகர் முதலியோர், கோவிலுக்குச்
சென்று கதவைத் திறந்து பார்த்தபோது,
பொற்றாம்பாளம் காணப்படவில்லை.

அர்ச்சகர்களும், ஊரின் உள்ள பெரியோரும்
திகைப்புற்று, ''யாரோ கள்வர்தாம் களவாடி
இருக்கவேண்டும்'' என்று கருதி ஆராய்ந்து
பார்க்கலாயினர். இதனால் இருபது நாழிகை
மட்டும் கோயில் பூசை நடைபெறாமல்
இருந்தது.

அப்போது அங்கிருந்த ஒரு அர்ச்சகர்
சிறுவன் தெய்வமுற்று, ''நமச்சிவாயா மூர்த்தி
சிதமபரத்திற்கு செல்லும் வழியில் ஒரு
ஆலமரத்தின் கீழ் இருக்கிறார்.
அவருக்கு உண்ணாமுலைத் தாயார்
அமுது கொண்டு போய்க் கொடுத்தார்.
அங்கே தாம்பாளம் கிடக்கிறது எடுத்துக்
கொண்டு வரவும்! என்றான்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர்களின் வழியில்...- குரு நமச்சிவாய சுவாமிகள் -1

அண்ணாமலைக்கு வாவென்று அழைத்து
ஆட்கொண்ட ஞான தபோதர்
குகை நமச்சிவாயர் ஒரு சிவயோகியாக,
சித்தராக சமாதி முக்தி அடைந்தார்.
அவர் அண்ணாமலையில் ஒரு குகையில்
சிவயோகத்தில் இருந்து வந்தமையால்
குகை நமச்சியாவ மூர்த்தி எனக்
கூறப்பட்டார்.

அவருக்கு நமச்சிவாயர் என்றொரு மாணவ
சீடன் இருந்தார். அவர் ஞானாசிரியரின்
அருகிலிருந்து அன்புடன் பணி செய்து வந்தார்.
குகை நமச்சிவாயர் குகையின் பக்கத்தில்
வளர்ந்தோங்கி இருந்த ஆலமரத்தில் மரத்தில்
ஊஞ்சலிட்டு அதில் யோக நித்திரை
கொள்வது வழக்கம்.

[இன்றும் ஒரு வளர்ந்தோங்கி ஆலமரம்
கோயில் நுழைவாயிலிலும்,
குகை நமச்சிவாயர் சமாதி
அருகிலும் இருக்கிறது.]

அதன்போது ஞானாசிரியன் அருகிலிருந்து
பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது
ஆசிரியர் அருகில் இருந்தபோதும்
'குலுக்' என்று நகைத்தார்.
''நமச்சிவாயம் என்ன அதிசயம் கண்டு
நகைத்தாய்?'' என்று குகை நமச்சிவாயர் கேட்டார்.

அப்பொழுது மாணவ சீடராகி நமச்சிவாயர்,
''ஐயனே திருவாரூரின் கண் தியாகராசப்
பெருமானைத் திருவீதியின் கண்
எழுந்தருளச் செய்து உலா வரும் போது,
நாட்டியப் பெண்கள் ஆடிக்கொண்டு வர,
அவர்களுள் ஒருத்தி கால் இடறி விழுந்தாள்;
அங்கிருந்த அவைவரும் நகைத்தார்.
யானும் நகைத்தேன்'' என்றார்.

இதுபோன்று ஒருநாள் ஞானாசிரியரின்
அருகில் இருந்தபோது, தம் ஆடையைப்
பற்றி தேய்த்தார். ''ஏன் இவ்வாறு ஆடையைப்
பற்றித் தேய்த்தனை" என்று குகை நமச்சிவாயர்
கேட்ட போது. ''பெருமானே! தில்லை மாநகரிலே
பொற்சைபையிலே திரைச்சிலை இட்டிருந்தார்கள்.

அதன் அருகில் குத்துவிளக்கு சுடர் விட்டு
எரிந்துகொண்டிருந்தது, அதனை ஓர் எலி பற்றி
இழுத்துகொண்டு சென்றது, அச்சுடர்
திரைசீலையில் பட்டதனால் அத்திரைச்சிலையில்
தீப்பற்றிக்கொண்டது. அங்கிருந்தவர்கள் அத்தீப்
பரவாமல் சீலையைப் பற்றிக் கசக்கினர்,
யானும் கசக்கினேன்'' என்றார்.

பின்பு ஒருநாள் குகை நமச்சிவாயர் மாணவர்
உள்ளத்தை அறியவும், சோதனை செய்யவும்
தேர்ந்து அறியவேண்டி வாந்தி எடுத்து
அதைத் திருவோட்டில் பிடித்து, ''இதை மனிதர்
கால் அடிபடாத இடத்தில் இட்டுவருக'' என்று
கட்டளை இட்டார். அதை நமச்சிவாயர்
ஏற்றுக்கொண்டு மனிதர் உலவாத, கால்
அடிப்படாத இடம் எதுவென ஆராய்ந்து பார்த்தார்.

அப்படி ஒரு இடம் இல்லை என்று அறிந்து,
அதனைத் தாமே உட்கொண்டார்.

ஆசிரியர் இந்த அருஞ்செயலைக் கண்ணுற்று,
''அன்பனே! அடிபடாத இடத்தில் வைத்தணையோ?''
என்று கேட்டார்.

அதற்கு பதிலாக, ''அய்யனே, அதனை வைக்க
வேண்டிய இடத்தில் வைத்தேன்...'' என்று மிகவும்
பணிவாக விடை அளித்தார்.

மாணவர் செய்த மூன்று அருஞ்செயல்களையும்
கண்ட நமச்சிவாய மூர்த்தி, மாணவருடைய
ஞான நிலை நாளுக்கு நாள் உயர்ந்து அறிந்து
''அவரை அவர்க்கேற்றதொரு புனிதமான
இடத்திற்கு அனுப்பிவைத்தல் வேண்டும்'' என
முடிவு செய்தார். உடனே ஒரு வெண்பாவில்
பாதி வெண்பாவினைக் குகை நமச்சிவாயர்
இயற்றி பாடினார்.

நேரிசை வெண்பா....

''ஆல்பழுத்துப் பக்கியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்றநிலை வீணிலெனச் --------
என்று பாடி நிறுத்தினார்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர்களின் வழியில்...- குகை நமச்சிவாயர் #6

ஒருநாள் குகை நமச்சிவாயர், அண்ணாமலையார்
சந்நிதிக்குச் சென்று வழிபாடு, செய்து கொண்டு தம்முடைய குகை நோக்கித் திரும்புகையில்
ஒருபெண் தன் கணவனை இழந்து கண்ணீர் சொரியக்
கதறி அழுதுகொண்டு நமச்சிவாய சுவாமிகளை
விழுந்து வணங்கித் தன் கணவனை எழுப்பித்
தருமாறு மன்றாடினாள்.

அந்தப் பெண்ணின் ஆற்றோணாத் துயரினைக்
கண்ட சுவாமிகள் உள்ளம் உருகி,
அண்ணாமலையாரை திருவடிகளை நினைந்து உருகிபாடினார்.
பிறகு, அந்தப் பெண்ணினை நோக்கிக்
''குழந்தாய்! அண்ணாமலையார் எனக்கு
கூடுதலாக நூறு வயதினை தந்துள்ளார்;
அந்த நூறு ஆண்டுகளுள் எழுபத்தைந்து
ஆண்டுகளை உனக்கும் உன் கணவனுக்கும் தந்தேன்,
உன் கணவன் உயிர்ப் பெற்று எழுவான்,
வீடு நோக்கிச் செல்க!'' என்றார்.

அந்தப் பெண் நம்பிக்கையுடன் வீட்டிற்குச்
சென்றாள். கணவன் உயிர் பெற்று
எழுந்தனைக் கண்டாள்; பெருமகிழ்ச்சிக் கொண்டாள்.

கணவனுடன் சென்று குகை நமச்சிவாய
சுவாமிகளுடைய திருவடிகளில் வீழ்ந்து
வணங்கி, அவருடைய அருள்
நோக்கத்தினைப் பெற்று வீடு திரும்பினாள்.

இவ்வாறாக குகை நமச்சிவாயர்
அண்ணாமலையில் வாழ்ந்து வருங்காலத்தில்
நகித் எனப் பெயர் கொண்ட மிலேச்ச மன்னன்
ஒருவன் அண்ணாமலைக்குவது சேர்ந்தான்.

அவன் மதங்கொண்ட யானையை போன்று காணப்பட்டான். அவன் அழகுமிக்க பெண்களைப் பல சாதிகளிலிருந்து
வன்முறையில் கவர்ந்துகாவலில் வைத்து
அறநெறிக்கு மாறாக நடந்து வந்தான்.

அவன் அழிவதற்குரிய காலம் வந்து விட்டபடியால், அண்ணமலையார் திருக்கோயிலுனுட் புகுந்து
சில வருந்தத்தக்க செயல்களைச் செய்யத் தொடங்கினான்.

இவற்றை எல்லாம் கண்ணுற்ற குகை
நமச்சிவாய சுவாமிகள்,'' மூன்று சுடர்களையும்
மூன்று கண்களாகக் கொண்ட சிவபிரானுடைய
நெற்றிக்கண்ணும்ஆழ்ந்த உறக்கம்
கொண்டுவிட்டதோ'' என்ற கருத்தினை
அமைத்துப் பாடினார்.

அன்றிரவில் அண்ணாமலைப் பெருமான்
மிலேச்சன் கனவில் தவசியாகத்தோன்றி, ஒரு படையினால் முதுகிடத்தில் சிறிது குத்தினார்.
மிலேச்சன் விழித்து எழுந்தான்.

முதுகில் ஏதோ ஒரு சிறிது ஊறல்
தோன்றுவது போல் அவனுக்குத் தோன்றியது. பிறகு அவ்விடத்திலொரு வேர்க்குருதோன்றியது.

பின்னர் அவ்வேர்க்குரு முதுகுப் பிளவையாக
உய்க் கொண்டது. அதனைக் கண்ட மிலேச்சன்
வருந்தினான். அவனுடன் வந்த சில பெரியவர்களிடம்
அதனைக் கூறினான்.

'' நீ இவ்வாலயத்திற்குள் இருத்தல் கூடாது''
என்றவுடன் கோயிலை விட்டு வெளியேறினான்.
பிறகு உணர, துன்பமுற்றுப் புழுக்கள் பெருகிடத்
தாங்கொணாதவனாகி, ஓரிரவில் துடிதுடித்து
இறந்தான்.

இதனைக் கேள்வியுற்றமக்கள் பெருமகிழ்ச்சியுற்றனர்.
அவன்இறந்த தினத்தன்று மக்கள் அனைவரும்,
இராவணன் இரணியன் போன்றவர்கள் அழிந்த நாளில்
உலகம் எவ்வாறு மகிழ்ந்ததோ அவ்வாறு மகிழ்ந்தனர்.

கருவுற்ற காலத்தில் விதிக்கப்பெற்ற நூறு வயதும்
கழிந்தாற் போலவே, பிறகு சிவபிரான் அளித்த நூறு
வயதும் கழிந்து போயினமை அறிந்து,
தமக்குத்தலைவராயும், தந்தை, தாய்,
தெய்வமாகவும் விளங்கும் திருமலையில்
அன்று இயற்றப் பெற்ற குழியில்கண் புகுந்தார்.
புகுந்தவர், அங்கிருந்த அன்பர்களை நோக்கி, ''என்னை, இவ்வுடல் என்று நினையாதீர்.
இவ்வுடல் நான் அல்லேன்'' என்று
சொல்லிக்கொண்டே அருவம் ஆனார்.
பிறகு அங்கிருந்தவர்கள், அவ்விடத்தே
இலிங்கம் அமைத்து வழிபாடாற்றினர்

குகை நமச்சிவாயர் தொடர் - நிறைவு
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர்களின் வழியில்...- குகை நமச்சிவாயர் #5

இந்த நிகழ்ச்சி பல காத தூரத்தில்
நடைபெற்றதென்றாலும், அண்ணாமலையில்
குகைக்குள் இருந்த நமச்சிவாயர் ஞானநோக்கால்
அறிந்து திடீரென நகைத்துக் கனல் பிழம்பு
போன்ற கவியொன்றை இயற்றினார்.
உடனே அந்த வைணவ குருவின் கண்கள்
ஒளியிழந்தன.

அந்த வைணவ குரு சில திங்கள் வரை
அல்லலுற்று, பின்னர் அண்ணாமலையில்
அமர்ந்திருக்கும் மாபெரு ஞானியாகிய
குகை நமச்சிவாய தேவர்வாயிலாகத்
தனக்குக் கிடைத்த தண்டனை என்று
அறிந்ததும் அண்ணாமலைக்கு வந்து
குகை நமச்சிவாயரிடம் அடைக்கலம் புகுந்தார்.

அப்போது குகை நமச்சிவாய தேவர்
அந்த வைணவ குருவை நோக்கி,
''நீர் எந்த மலையைக் கண்ணாலும்
பார்க்கக் கூடாதென்று திரையிட்டு
மறைக்கக் கட்டளையிட்டீரோ அந்த
மலைக்கே சென்று அங்கு எழுந்தருளியிருக்கும்
திருக்காளத்தி இறைவனை வணங்குவீரானால்
மீண்டும் கண்ஒளியைப் பெறுவீர்!'' என்றார்.

அவரும் அவ்வாறே சென்று வணங்கி
கண் ஒளியைப் பெற்றார். இவ்வாறாகவே,
பல அருட்பெருஞ்செயல்களை செயல்களைச்
செய்து அண்ணாமலையில் வாழ்ந்து வரும்
நாளில், அண்ணாமலையாரிடம் தம்மிடம்
ஈடுபாடுடைய மன்னன் ஒருவனைக் கொண்டு
குகை நமச்சிவாயர்க்கு பொன்னும் மணியும்
அணியும் பல்லாக்கும் அளித்துத்தனக்கு
முன்னே செல்லுமாறு பணித்தருளினார்.

இந்த நிலையில் குகை நமச்சிவாயருக்கு
வயது நூறு ஆயிற்று. விதிக்கப்பெற்ற ஆயுள்
முடிந்த பின்னரும் இங்கிருந்தல் பிழையாகும்
என்று சொல்லி முறைப்படி முன்பாகவே
அமைக்கப் பெற்றிருந்த சமாதிக் குழியில்
தாமே இறங்கினார். பரம்பொருளாகிய
சிவபெருமான வானத்தில் இருந்து அசரீரியாக
அங்கு வந்திருந்த பலரும் கேட்குமாறு, '' அன்பனே!
நீ இவ்வுலகில் மேற்கொண்டு நூறாண்டுகள் வாழ்வாயாக'' என்றுரைத்தருளினார். இறைவன் திருவுளப்
பாங்கினையுணர்ந்த குகை நமச்சிவாயர்,
அப்பெருமானைப் பாடிமகிழ்தார்.

அவர் காலத்தில் வேற்று மதத்தினரால் சைவ
சமயத்திற்கு வந்துற்ற இடையூறுகளை எல்லாம்
நீக்கி சைவத்தின் சிறப்பினை நிலைநாடினார்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர்களின் வழியில்...- குகை நமச்சிவாயர் #4

இறைவன் திருவருளை நினைத்து மனம்
உருகி நின்ற குகைநமச்சிவாய தேவர்
புதர்களில் இருந்த தழைகளைக் கொய்து
ஆட்டிற்குக் கொடுத்து மகிழ்ந்தார். மறுநாள்
அந்த இடையன் அவ்விடத்திற்கு வந்து,
ஆடு குட்டியுடன் மேய்ந்து கொண்டிருப்பதைக்
கண்டான்; பெருமகிழ்ச்சி கொண்டு குகை
நமச்சிவாய சுவாமிகளிடம் சென்றான்.

குகை நமச்சிவாய சுவாமிகளுடைய
கட்டளைப்படி இடையன் பெருமகிழ்ச்சியுடன்
ஆட்டினையும் குட்டிகளையும் கொண்டு சென்றான்.

இரண்டு குட்டிகளையும் இரண்டு தோள்களில்
சுமந்து கொண்டு செல்லும்போது முன்னாள்
உயிரிழந்து இடையனால் சுமந்து செல்லப்பட்ட
ஆடானது இன்று கூவிக்கொண்டே பின்னே
செல்லப்பட்ட ஆடானது இன்று கூவிக்கொண்டே
பின்னே செல்லத் தன் மனையைச் சார்ந்தான்.

முன்நாள் இடையனைக் குகை நமச்சிவாயரிடம்
அனுப்பிய வீணர்கள் இந்த அற்புத நிகழ்ச்சியைக்
கண்டு, சுவாமிகளை இழிவுபடுத்துவதற்காக,
உயிருள்ள ஒரு இளைஞனைப் பாடையில்
வைத்துக் கட்டி, ''முனிவர் எழுப்பினாலும் எழாதே!''
என்று பாடையில் வைக்கப் பெற்றவனிடம்
சொல்லி வைத்து அவனைத் தூக்கிக்கொண்டு
முனிவரிடம் சென்று, 'சுவாமி, நல்ல இளைஞன்
ஒருவன் இறந்து போனான்; அவனை
எழுப்பித்தந்தருளுக!'' என்று வேண்டினர்.

வீணர்களுடைய பொய்ச்செயல்களைக் கண்ட
குகை நமச்சிவாயமூர்த்தி, ''போனவன் போனவனே
இனி அவன் எழான்'' என்று சொல்லினார்.
உடனே பொய்யாகப் பிணம்போல் பாடையில்
படுத்திருந்த இளைஞன் உயிர் பிரிந்து எமபுரம் சென்றது.

வீணர்கள் மனம் உடைந்து பெருந்துன்பத்திற்கு
ஆளாயினர். இந்த ஊரானது குறும்பர்கள் வாழும் ஊர்;
கொன்றாலும் ஏன் என்று கேளாத ஊர்?
மிகக் கொடிய காளைகள் கதறும் ஊர்;
பழியைச் சுமக்கும் ஊர்? தேளுக்கு ஒப்பான
பாதகர்கள் வாழும் ஊர்'' என்று சொல்லிய பின்
''என் சொல்லால் அழியப் போகிற ஊர்;
என்று சொல்ல எண்ணினார்;

அவ்வாறு சொல்லுதற்கு முன்னே தடங்கருணைப்
பெருங்கடலாகிய அண்ணாமலைப் பெருமான்
தோன்றி, ''அடே நான் ஒருவன் இந்த ஊரில்
இருக்கின்றேனடா'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

உடனே குகை நமச்சிவாயமூர்த்தி சினந்தணிந்து,
கருத்தை மாற்றி. ''அழியாவூர் அண்ணாமலை
என்று வெண்பாவை'' முடித்தருளினார்.

''கோளர் இருக்குமூர், கொன்றாலும் கேளாவூர்
காளையரே நின்று கதறுமூர் - நாளும்
பழியே சுமக்குமூர், பாதகரே வாழுமூர்
அழியாவூ ரண்ணா மலை'' என்பது அவ்வெண்பா.

குகை நமச்சிவாயருக்குத் தொல்லை கொடுத்தவர்களைச்
சார்ந்தவர் பலர் பல்வேறு இன்னல்களுக்கும்
நோய்களுக்கும் உள்ளாகிப் பல்வேறிடங்களுக்கும் குடியேறிச் சென்றுவிட்டனர். சிலர் மட்டும், வாழ்ந்த ஊர்
என்ற பாசத்தினால் அருணையிலேயே தங்கினார்கள்.

ஒருநாள் ஓரிடையன் நூறு பசுக்களோடு
மலைச்சாரலையடைந்தபோது, ஒரு பசுவை
வேங்கை பற்றிக் கொண்டு ஓடிற்று. அந்த இடையன்
விரைந்தோடிச்சென்று குகை நமச்சிவாயரிடம்
சொல்லினான்.

உடனே சுவாமிகள் அண்ணாமலை அண்ணலை
நோக்கி ஒரு வெண்பாவைப் பாடினார்.
அப்போது வேங்கை, தான் கவர்ந்து சென்ற
பசுவைக் கொணர்ந்து வைத்துச்சென்றது. இந்த
அருஞ்செயலைக் கண்ட இடையன் வியப்படைந்து
எல்லோரிடமும் இதனை எடுத்துரைத்தான்.
கேட்டோர் அனைவரும் அண்ணாமலைப் பெருமான்
அடியவர்களால் ஆகாதது ஒன்றும் இல்லை
என்று பேசிக்கொண்டனர்.

பின்னர் ஒருநாள், ஒரு வைணவ குரு
காஞ்சி மாநகரிலிருந்து புறப்பட்டு
வடதிசை நோக்கிசென்று கொண்டிருந்தார்.
அப்போது கண்ணப்பன் கண்ணைப் பறித்து
சிவபிரான் அருளைப் பெற்ற திருக்காளத்திமலை
தோன்றியது. அதனையுணர்ந்த வைணவ குரு
உடன் இருந்தவரை நோக்கி,
''இம்மலை என் கண்ணுக்குத் தெரியாமல்
மறைப்பீராக! என்றார்.
அவர்களும் திரையிட்டு மறைத்தார்கள்

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை