Monday, November 02, 2009

முத்தொள்ளாயிரம் - 3

ஒரு பெண் சேரனைக் கண்டு காதல் கொண்டுவிட்டாள்.
அவனை மணந்து வேண்டுமென்று தனியா ஆவல்
கொண்டாள். தானாகக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள
முடியுமா? முடியாது. இந்த நிலையில், தனியான ஒரு
இடத்தில் அமர்ந்து என்ன எப்படியெல்லம் செயலாம்
என்று சிந்தனை செய்கிறாள்.

தன்னந் தனியாகத் தான் இருக்கிறாள். ஆனாலும்,
தன்னை ரொம்பவும் பாராட்டி வந்த ஊரார், தன்
முன்னிலையில் நிற்பதாகப் பகல் கனவு காண்கிறாள்.
அப்படியே அவர்களிடத்தில் பேசுகிறாள்.
இந்த உருவெளித் தோற்றத்தோடு பேசுகிறதெல்லாம்,
காதல் போதையிலிருந்து உண்டாவதுதான்.

நீரும் நிழலும் போல் நீண்ட அருளுடைய
ஊரிரே! என்னை உயக்கொண்மின் ! போரிற்(கு)
உழலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்(கு)
அழலும்என் நெஞ்சம் கிடந்து.

(காதல் நோயால் என் நெஞ்சு சதா கொதித்த வண்ணமாக
. ஊரிரே என்னை உயக்கொண்மின் ! )
====================================================

ஒரு பெண்ணுக்குப் பாண்டியன் மீது அபாரமான
காதல் விளைந்துவிட்டது. தண்ணீர்த் துறைக்குப்
பாண்டியன் சவாரி செய்யும் குதிரையை
நடத்திக் கொண்டு போகும் போது,
அவள் நாணத்தோடு வாசற்கதவைச் சிறிது
சாய்த்த வண்ணமாய் பார்த்தாள்.
குதிரையோடு பேசுகிறாள் - தன்னந்தனியாக
நின்றுகொண்டுதான்!

“ குதிரையே ! எதிரிகளைத் துரத்தும்போது
போர்க் களத்தில் வேகமாய்ப் பாய்வாய்;
அது சரித்தான், ஆனால், ஊருக்குள் எதிரிகள்தான்
கிடையாதே; ஒரே படியாகப் பாய்ந்து ஓடாமல்,
மெல்ல நடந்து போனால் என்ன கேடு !“

போரகத்துப் பாயுமா! பாயா(து) ஒருபடியா,
ஊரகத்து மெல்ல நடவாயோ ! - பார
மதவெங் களியானை மாறன் தன் மார்பம்
கதவங்கொண்(டு) யாமும் தொழ.

[ இந்தக் கவி பெண்ணின் கூற்று என்பது மறைவாய்
கிடக்கிறது. மார்பம் தொழ, கதவங்கொண்டு, என்னும் சொற்களை
வைத்துத்தான் காதலுற்ற பெண் பேசுகிறாள். இப்படிக் காதலை
மறைவில் வைத்து சொல்வதிலிருந்து ஒரு நாண பாவம்
இருப்பதை தெளிவாக்குகிறது ]

அவள் சோழனோடு மாலை நேரத்தில் கூடிக்
குலாவுவது வழக்கம். மாலை நேரம் வந்ததும்
நாயகனிடத்தில் ஒரே நாட்டம். நாயகன் வரக்
கொஞ்சம் தாமதம் ஆனாலும் சரி, அவளுக்கு
சங்கடம், ஏக்கம். மாலை நேரம் வந்ததைக்
காட்டும் அடையாளங்களில் ஒன்று இடைப்
பையன் பசுக்களை மேய்ச்சல் புலங்களில்
இருந்து ஊருக்கு ஓட்டிச் செல்வது.

இடைப்பையனின் புல்லாங்குழலை இதமாக
வாசித்து வருகிறான் இந்தப் புல்லாங்குழல்
இசையானது நாயகிக்கு, அந்தி நேரத்தையும்,
நாயகன் வரவில்லை என்ற ஆத்திரத்தையும்
தூண்டிவிடுகிறது.

நாயகி தனக்குள்ளே பேசிக்கொள்கிறாள்.
‘சோழன், ஏதோ நாட்டிலுள்ளவர்களுக்குத்
துன்பம் ஏற்படாமல் காக்கிறான் என்கிறார்கள்;
எனக்கொன்றும் விளங்கவில்லை, துன்பம்
செய்கிறதைத் தடுத்தால் அல்லவா பாதுகாக்கிறான்
என்று சொல்ல முடியும்.

தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி இளவளவன்
மண்ணகம் காவலனே என்பரால் - மண்ணகம்
காவலனே ஆனக்கால்க் காவானே - மாலைக்கண்
கோவலர்வாய் வைத்த குழல்

[தெளிந்த நீர்நிலைகளில் பூத்த செங்கழுநீர்
மலர்களை மாலையாய் தொடுத்த அணிந்த
சென்னி என்றும் இளவளவன் என்றும்
பாராட்டப்படுகிற சோழன் உலகத்தைக்
காக்கிறான் என்று சொல்லுகிறார்கள்.
கட்டளை இட்டு தடுக்க மாட்டானா
இந்த மாலைப் பொழுது வந்துவிட்டதை அறிவிக்கும்
வாய்வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை]

இந்த கவியில் காதல் நோயினால் ஏற்படும்
பரிதாபம் இருக்கிறது. அதனூடே நகைச் சுவையும்
இருக்கிறது. பாட்டின் உருவம் பூர்வமான
கவிப்பண்பைக் காட்டுகிறது.
--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

Friday, October 23, 2009

முத்தொள்ளாயிரம் - 2

உறையூருக்கு வடக்கே, ஏதோ பத்து மைல்
தூரத்தில் ஒரு சிறு ஊர். அந்த ஊரிலுள்ள ஒரு பெண்
உறையூருக்கு வந்து போவது வழக்கம். வந்தால், காவேரியில் குளிப்பாள்.தண்ணீரிலுள்ள வாளை மீன்கள் கரையில்
மெள்ள மெள்ள ஏறி, அகப்பட்ட இரையைக் கவ்விக்கொண்டு,
பிறழ்ந்து, தண்ணீருக்குள் மறுபடியும் விழுந்துகொள்ளும்.

இந்த வளமான இடத்தில் ஒரு நாள் சோழமன்னன்
நீராட வந்தான். அவனைப் பார்த்து காதல் கொண்டு
விட்டாள் பெண்; பிறகு தன் ஊருக்கு சென்றுவிட்டாள்.

அங்கேயுள்ள குளத்துக்கு ஒருநாள் நீராடப் போனாள்.
வட திசையிலிருந்து பறந்து வந்த நாரை குளத்தில்
இறங்கி நின்றது. பெண் எண்ணுகிறாள்;
"நாரை சிறிது நேரத்தில் குளத்தை விட்டுக்
கிளம்பித் தெற்கேயுள்ள உறையூருக்குப் போகும், என்பதாக".
காதல் வெறி அவளை எப்படி பேசச் செய்கிறது..., பாருங்கள்.

செங்கால் மடநாராய்!
தென் உறந்தை சேறியேல்,
நின் கால்மேல் வைப்பான் என்
கையிரண்டும் - வன்பால்க்
கரை உரிஞ்சி மீன் பிறழும்
காவிரி நீர் நாடற்(கு),
உரையாயோ யான் உற்ற

( அழகிய நாரையே, தெற்கேயுள்ள
உறையூருக்குச் செல்வாயானால்,
உன் காலைப் பிடித்துக் கும்பிடத் தயார்.
தேகத்தின் வலிமை காரணமாகக் கரையின்
மேல் உராய்ந்து, உராய்ந்து ஏறிய மீனானது
மறுபடியும் நீரில் விழுந்து விடுகிற மீனின்
தேகக்கொழுப்பு சோழனுக்கு யான்
உற்ற காதல் கூறுவாயக!)

{காதலுற்ற பெண் தோழியைப் பார்த்துப்
பேசினாள் என்றால் சாமானய உண்மை.
நாரையைப் பார்த்துப் பேசினாள் என்னும் போது,
காதல் வெறியை வேகத்தை நன்றாய்
எடுத்து காட்டுகிறது செய்யுள்.

காதலும் சோகமும் கலந்த சாயல்,
கவியில் நயமாக அமைந்துள்ளது.
கடைசி அடியை பாடிப் பார்த்தால்
பாவம் தெரிந்துவிடும்.}
================================================

2
பெண் யானை ஒன்றின் மேல் ஏறி
வந்தான் பாண்டியன். ஒரு கன்னிகை அவனைப்பார்த்துக்
காதல் கொண்டு விடுகிறாள். யானை நடந்து வந்ததும்,
அரசன் அதன்மீது இருந்தும் மனசை
விட்டு அகலவில்லை.

அரசனுடைய உருவம் முழுதும் அப்படியே
நிற்பது ஒரு காரியமல்ல, அவன் ஏறி வந்த
யானையின் உறுப்புகள் ஒவ்வொன்றும்
அப்படி அப்படியே உள்ளத்தில் நிற்கின்றன.
அவைகளில் ஈடுபடுகிறாள்

யானையினுடைய கால், அடடா,
துடி (உடுக்கை) போவே இருக்கிறது
செவியோ, தோலினால் செய்த கேடயம்
போலவே இருக்கிறது. துதிக்கை
எப்படியெல்லாமே ஆடுகிறது. வாய்
தொங்குகிற அழகோ தனி, யானையை
இப்படியெல்லாம் அனுபவிக்கிறாள்

நீராடப் போயிருந்த இடத்தில்,
குளிப்பாட்டுவதற்குகாக, யானை வந்திருந்தது
அரசனும் நீராட வந்திருந்தான். அப்போது
யானையைப் பார்த்துச் சொல்லுகிறாள்.

துடியடி, தோல்ச்செவி தூங்குகை, நால்வாய்ப்
பிடியே! யான் நின்னை இரப்பால், கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலும், எம்
சாலேகம் சார் நட.


(கெஞ்சி கேட்டுக்கொள்ளுகிறேன்.
வாசனை கமழும் மாலை சூடிய,
சந்தனம் பூசிய பாண்டினோடு,
ஊருக்குள் பிரவேசிக்கவும் அதாவது,
நீராடிவிட்டு உன்மேல் ஏறி
ஊருக்குள் மன்னன் புகும் போது,
எங்கள் வீட்டு ஜன்னலை ஒட்டி
நடந்து வரவேண்டும்.
நான் அங்கு நின்று கொண்டிருப்பேன்
விஷயம் தெரிகிறதா, பிடியே?)

{அரசனைக் கண் குளிரப் பார்த்துவிட வேண்டுமென்ற
ஆத்திரம் அப்படி இருக்கிறது அந்த பெண்ணுக்கு !}
===============================================
3

இன்றைய காலத்தில், இரவில் வெளியே போக
நேர்ந்தால், காற்றில் விளக்கு அணைந்து
விடாதபடி விளக்கு வசதிகள் உண்டு.
பூர்வ காலத்தில் கை விளக்குதான்.
அதைக் காற்றாடிக்கிற காலத்தில் குடத்துக்குள்
இட்டு கவனமாய் பெண்கள் எடுத்துச்
செல்வார் பெண்கள். எடுத்துச்
செல்லும் பெண்ணுக்கு மாத்திரமே
அந்தக் குடவிளக்கு வெளிச்சம் கொடுக்குமே யல்லாது
மற்றவர்களுக்கு ஒளி இருப்பது தெரியாது.

வெளியிலே வெளிச்சம் இல்லை என்றால்,
குடத்துக்குள் விளக்கு இல்லை என்றாகுமா?

பாண்டியன் மேல் வைத்த காதல்
நோய் பெண்களிடம் சாதாரணமாக வெளிப்படத்
தெரியாது. ஆனால், இதயத்தில் மறைவாக
இருந்துகொண்டேதான் இருக்கும்.
பாண்டியன் பவனி வருவதற்காக
அரண்மனையிலிருந்து புறப்பட்டு வீதி வழியாக
வந்துவிட்டலோ, அவர்களுடைய காதல்
நோய் ஊராரது பேச்சுகிடமாய் வெளிப்
பட்டுவிடும். நின்ற நிலையிலே நிற்பார்கள்
அந்த பெண்கள், வெறித்துப் பார்ப்பார்கள்.
சோர்ந்து படுப்பார்கள். இதைவிட வெளிப்படையான
காரியம் என்ன வேண்டும்.

" குடத்து விளக்கே போல்க்
கொம்பன்னார் காமம்
புறப்படா; பூந்தார்
வழுதி புறப்படில்,
ஆபுகு மாலை
அணிமலையில்த் தீயே போல்
நாடறி கெளயை தரும்.

( பாண்டியன் மேல் பெண்கள் வைத்த
காதல் வெளியே தெரியாது.
மாலை சூடிய பாண்டியன் பவனி
வருவதற்காகப் புறப்பட்டு விட்டாலோ
பசுக்கள் மேய்ச்சல்ப் புலங்களிலிருந்து
ஊருக்குக்குள் புகும் மாலை நேரத்தில்

ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைச்சரிவில்,
நாட்டார் எல்லோரும் அந்த பெண்களது
காதல் நோயைத் தெரிந்து,
வம்பளப்பதற்கு வாய்விடும்)
==========================================
4

நம்மவருக்குள் சில வேடிக்கையான
கொள்கைகள் உண்டு. அவைகளில் ஒன்று
தேங்காயைப் பற்றியது. தேங்காய்க்குள்
ஒரு வகையான காளான் எப்படியோ
போய், தேங்காய்ச் சத்தையெல்லாம்
தின்றுவிடுகிறது. தேங்காயை உடைத்தால்
உள்ளே வெறும் கொட்டாங்கச்சியாய் இருக்கும்.
இத்தகையத் தேங்காயைத் ‘'தோரோடி'' என்று
சொல்லுவார்கள். தேரையே சத்தைத் தின்றுவிட்டதாக
என்பார்கள. பழி எப்படியோ தேரையின் தலைமேல் விழுந்து விடும்.

சரி, இப்போது ஒரு பெண்
சொல்லுகிறதைப் பார்ப்போம்.

அவள் சோழன் மேல் காதல் கொண்டுவிட்டாள்.
அவனையே எண்ணிக் கொண்டு இருக்கிறாள்.
ஆனால், அவன் தனக்குக் கிட்டவா போகிறான்,
இல்லை. தனக்கும், அவனுக்கும் உறவு உண்டு
என்று தாயானவள் கோல் கொண்டே அடிக்கிறாள்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் தனக்கும் அரசனுக்கும்
சம்பந்தம் உண்டு என்று சதா
தூற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

தன் ஆத்திரத்தில், இப்படி என்ன சொல்லுகிறாள்:
''அடிக்கட்டும், தூற்றட்டும், கவலையில்லை.
சோழனை அணைத்தேன் என்று இருந்தால்
போதும். அது இல்லையே !''

அன்னையுங் கோல்கொண்(டு) அலைக்கும்; அயலாரும்
என்னை அழியுஞ்சொல்ச் சொல்லுவார்; உள்நிலைய
தெங்(கு) உண்ட தேரை படுவழிப் பட்டேன் யான்.

( அன்னை அடிக்கிறாள். அயலார் சொல்லும்
தன்னை வருத்துகிறது சோழனோடு கூடி
அனுபவித்திருந்தால் அதுவும் சொல்லலாம்.
அந்த அனுபவமும் இல்லாது போனது.
தேரைக்கு எட்டாத படி உள்ள தேங்காயின்
சத்தை உண்ட தேரைக்கு வந்த பழி மாதிரி
எனக்கும் பழி வந்தது. )

அனுபவபூர்வான உண்மையினை செய்யுள் வடிவில் கவிஞர் காட்டியுள்ளார்.

--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com

Sunday, October 18, 2009

முத்தொள்ளாயிரம் ஆசிரியர்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு கவிஞர்
இருந்தார். அவர் பாடிய கவிகள் அபார வேகங்
கொண்டனவாயும் கேட்பவர் உள்ளத்தைக்
கவர்வனவாயும் இருந்தன.

கவிஞர், கொச்சி என்று இப்போது வழங்குகிற
வஞ்சியில் சில ஆண்டுகள் இருந்தார். மன்னனும்
சகாக்களுமாகக் குழுமி இருக்கும்போது பாடலைப்
பாடுவார். கவியைக் கேட்டு அதிசயித்துப் போனார்கள்.
நண்பர்களைப் பார்த்தால் கவி மூலமாக பாடல்
பாடிக் கேட்பார். கவிஞரை நண்பர்கள் வெகுவாக
புகழ்ந்தார்கள்.

இரண்டொரு ஆண்டுகள் ஓடின. பாடல்களை
கணக்கிட்டுப் பார்த்ததில் தொள்ளாயிரம் என்று
கண்டார்கள். வாய் நிறைந்த எண்ணாய் இருந்தது.
‘சேரத் தொள்ளாயிரம்' என்று பெயர் கொடுத்து
நூலைப் போற்றி வந்தார்கள்.

சேர மன்னன் பல பரிசுகளைக் கவிஞருக்கு
கொடுத்தான். மன்னனிடம் விடை பெற்றுக் கொண்டு
வஞ்சியிலிருந்து உறையூருக்குச் சென்றார்.
உறையூரில்தான் சோழ மன்னன் அப்போது
வசித்து வந்தான். சோழனைப் பற்றி தினம் தினம்
கவியொன்று பாட, அதுவும் ஒரு தொள்ளாயிரம்
ஆயிற்று.

கடைசியாக மதுரைக்குச் சென்று, பாண்டியனுடைய
பாராட்டுதலை எல்லாம் பெற்றார். அற்புதமான
கவிகளைப் பாண்டியன் மீதும் பாடினார். அவைகளும்
தொள்ளாயிரமாயின. ஆகவே, சேரன் சோழன்
பாண்டியன் இவர்கள் மீது பாடிய தொள்ளாயிரம்
தொள்ளாயிரமான மூன்று தொள்ளாயிரங்களும்
சேர்ந்து ஒரு நூலாகி, ''முத்தொள்ளாயிரம்" என்ற
பெயரோடு வழங்கி வந்தன.

கவிஞரைப் பற்றிய பெயர் தெரியாது.
ஊர் தெரியாது. காலமும் தெரியாது ஆனாலும்,
பாடல்களைப் பார்க்கும் போது, ஏதோ இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னுள்ள என்று சொல்ல
வேண்டியிருக்கிறது.

வெண்பாவில் அமைந்துள்ள எதுகைகளும்
மோனைகளும் அற்புத சுவையைக் காட்டுகின்றன.
உள்ளத்தில் கண்ட ஒவ்வொரு உண்மையும்
அற்புதமான கவியாக உருவெடுத்து ஒளி
வீசுகிறது. இந்த விதமாக இரண்டாயிரத்து எழுநூறு
பாடல்களை உதவிப் போயுள்ளார் கவிஞர்.

காலம்:-
கவிஞர் பற்றிய விரிவான விபரம், ஊர், காலமும் தெரியாது.
பாடல்களைப் பார்க்கும் போது, ஏதோ இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னுள்ளன என எண்ண
வேண்டியுள்ளது. வெண்பாவில் அமைந்துள்ள
எதுகைகளும் மோனைகளும் அபூர்வமான வைப்பைக்
காட்டுகிறது.

கவிஞருக்கு, மக்கள் இதயப் பண்பு இன்னதென்று
தெரிந்திருக்கிறது; தமிழ்ப் பண்பு இன்னதென்று
தெரிந்திருக்கிறது; எல்லாவறையும் விட,
கவிப் பண்பு இன்னதென்று தெரிந்திருக்கிறது.

உள்ளத்தில் கண்ட ஒவ்வொரு உண்மையும்,
எப்பேர்பட்ட உண்மையானலும் சரி,
அற்புதமான கவியாக உருவெடுத்து ஒளி
வீசுகிறது. இந்த விதமாக 2700 பாடல்களை
பாடியுள்ளார். சமீப காலம் வரை, அதாவது
நானூறு ஐந்நூறு வருஷங்களுக்கு முன் வரை
முத்தொள்ளாயிரத்தை சிலர் போற்றி
வந்திருக்கிறார்கள். அவர்கள் கையில்
முத்தொள்ளாயிர ஏடு இருந்தது என்பது
தெரிய வருகிறது. பிறகு ஏட்டைப்பற்றி ஒன்றும்
தெரியவில்லை.

கடைசியாக, புறத்திரட்டு எனும் நூலை
யாரோ ஒருவர் தொகுக்க நேர்ந்தது. விஷயங்களை
நாலடியார் திருக்குறள் முதலிய நூல்களில்
பாகுபாடு செய்ததது போல் வாழ்த்து, அவை
அடக்கம், நீத்தார் பெருமை, பொறையுடைமை,
அரண், கைக்கிளை[காமத்துப்பால்] என்று
அந்த அதிகாரங்களுக்கு ஒத்த செய்யுளை
யாத்துள்ளனர். அந்த ஏட்டிருந்தும் சில பாடல்களைப்
புறத்திரட்டில் ஆங்காங்கு பெய்து வைத்தார்.
நமக்குக் கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்கள்
எல்லாம் புறத்திரட்டில் பெய்துள்ளவைதான்.

அப்படி கிடைத்த பாடல்கள் 108 மேல் இல்லை.
ஆக 2700-108=2593 பாடல்கள் ஒழிந்து
போயின. அத்துனை அற்புதமான பாடல்களை-
மணிகளை இழந்தது தமிழுலகமும், தமிழரும்.

அந்த 2700 பாடல்கள் கிடைத்திருந்தால் நம்முடைய
சந்ததியரும் அனுபவித்து இருக்கலாம். இந்த
அனுபவித்திலிருந்து அரிய நூல்களையும்,
தமிழையும் வளப்படுத்தி இருக்கலாம்.

தமிழர்கள் இசையிலும், நாடகத்திலும் சிறந்து
விளங்கியவர்கள் என்று நாம் அறிந்த ஒன்று.
கோவை பிரபந்தங்களைப் பார்த்தால், எல்லாச்
செய்யுள்களும் நாடகத் துறைகளாகவே
இருந்துள்ளது. அவ்வளவு ஆர்வம், ஆசை
நாடகத்தில் நம்மவர்களுக்கு.

ஒரு நீதியைச் சொல்ல வந்த இடத்திலும் ஒரு
நாடக நிலையில் நின்று பேசுவார்கள் நம்மவர்கள்.

தோழியைப்பார்த்து நாயகி சொல்கிறதாக ஒரு பாடல்.
‘'நாயகன் ஏதோ ஒரு முக்கியமான காரியத்தில்
ஈடுபட்டுள்ளான். சரி, அப்படியானால் வர இயலாது
என்றுதானே சொல்லவேண்டும். அதை விட்டு விட்டு
இங்கே நம்மிடம் ‘மாலை வருகிறேன்' என்று
வேண்டுமென்றே பொய் சொன்னான் அல்லவா?

இந்த ஆற்றாமையை நாலடியார் செய்யுள்
ஒன்று விளக்குகிறது.

இசையா ஒரு பொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று, வையத்(து) இயற்கை; நசையழுங்கச்
சென்றோடிப் பொய்த்தல் நிறைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரில் குற்றம் உடைத்து.


[ஆசையினால் மனஞ் சோரும்படி,தோள்
வளையங்களை ஒழுங்காய் அணிந்த தோழியே
ஒருவர் செய்த குற்றத்துக்கு மாறாகத் தீமை
விளைத்தல் போன்ற பாதகமல்லவா இது.!]

இதுபோலக் காதலனது நாட்டு வளத்தையும்
நகர வளத்தையும் சேனை வளத்தையும்
நாயகி மூலம் வெளிப்படுத்துவது, காதல்
துறையைச் சேர்ந்தது.

முத்தொள்ளாயிரத்தில் வந்துள்ள வர்ணனைகள்,
தனித்த முறையில் பார்த்தாலே மிக
அழகாய், சுவையாய் உணரலாம். காதல் துறையில்
வைத்துப் பார்க்கும் போது,
வர்ணனைகள் ஒளிப்படலம் போல்
தெளிவாக தெரிகிறது.

பாத்திரப் படைப்பில் நான்கு முக்கிய பாத்திரம்.
முதலாவது நாயகியாகிய பெண். இரண்டாவது
பெற்ற தாய்.'' ஐயோ.காதல் மோகத்தில் இருக்கும்
மகளை ஊரார் தப்பாக சொல்வார்களே! ‘'
என்று மகளைக் கண்டிக்கிற காரிய நாடகப் பாங்கு.

மூன்றாவது, நாயகியை வளர்த்தெடுத்த
செவிலித் தாயர்கள். உளவு செய்யவும்,ஆறுதல்
சொல்பவர்களாகவும் இருப்பார்கள்.

நான்காவது தோழிகள். காதல் சம்பந்தமான
எந்த விழயமாக இருந்தாலும் அவர்களிடம் மனம்
விட்டு பேசுவார்கள். உடனாகவும், தூது செல்லவும்
தயாராய் இருப்பார்கள்.
------------------------------------------------
முத்தொள்ளாயிர ஆசிரியருக்கு உலக சாஸ்திரம்
தெரிந்திருக்க அதிக வாய்ப்பில்லை.
கொச்சி (வஞ்சி), உறையூர், காவிரி, காஞ்சி, தஞ்சாவூர் போன்ற
நகரங்கள அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருந்து
இருக்கலாம். பாண்டி நாடு, திருநெல்வேலி, தாம்பிரபரணி
உற்பத்தியாகிற பொதிகை மலைச்சாரல்களையும்
வெகுவாக இரசித்துள்ளார்.

ஏதோ நூறு பாடல்களை வைத்துக்கொண்டு நாம்
இப்போது பேசுகிறோம். தொலைந்து போன 2600 பாடல்களையும்
பார்த்தால் அவரின் விலாசமான பார்வை பற்றி அறிய முடியும்

கவி என்று சொல்லும்போது ஏதோ ஒரு சேதியைச்
சொல்ல வந்தது போல் தோன்றும் பலருக்கு.
வேறு சிலர் அதிலுள்ள உணர்ச்சிகளை தெரிந்து
கொண்டால் போதும் என்று எண்ணலாம்.

ஆனால், உணர்ச்சியானது பாவ உருவத்தில்
வெளிப்படுகிறதா என்று முக்கியமாக கவனத்தில்
கொள்ளலாம். இந்த உருவத்தின் மூலம் கவிஞரது
உணர்ச்சி தாளங்கள் இயல்பாக உள்ளத்தில்
எழுவதை காணலாம்.

முத்தொள்ளாயிரம் என்னும் பெயரோடு நமக்குக்
கிடைத்திருக்கும் 99 பாடல்களை நாம் பாடி,
படித்து அனுபவிக்கலாம். மக்களது நேர்
அனுபவமான உணர்ச்சிகளைக் கொண்டது
முத்தொள்ளாயிரப் பாடல்கள்.

அன்பொடு,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/