Friday, June 23, 2006

காசி யாத்திரை பகுதி--1

இந்தியாவிலேயே அதிகமான அளவு கோயில்கள் உள்ள நகரம் காசிதான் என்று வரலாற்று ஆசிரியர்கள்
கூறுகிறார்கள்.காசியில் சுமார் 1800 கோயில்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி, துண்டி, கணபதி, துர்க்கா, சங்கட விமோசன, அனுமான், காலபைரவர், பசுபதிநாதர், பிந்துமாதவர் இப்படி அங்கேயேயுள்ள ஆலங்களே அநேகம். இரவும் பகலும் எந்த நேரத்திலும் ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டத்தை அங்கு காணலாம்.

அதேபோல அதிகமான புண்ணிய ஸ்நானம் கங்கை கரை ஓரம் அமைந்துள்ளது. வருணை நதியும், அஸி நதியும் இரண்டு எல்லைகளுகுள்ளாக சுமார் இருபது நீராடும் கட்டங்கள் இங்கே அமைந்திருக்கிறது. இவற்றின் வழியாக செல்லும் கங்கா நதியை மாதாவாக பெண்கள் மலரில் விளக்கு வைத்து பூஜை செய்கிறார்கள். நமது இந்து சமயம் தழைக்க வந்த ஞானிகள் பலரும் உலவிய புனித பூமி வாராணசி எனப்படும் காசி. துளசிதாசர்,கபீர் முதலாக சமீப காலத்து மாஆனந்தமாயி வரை இங்கே வாழ்ந்த பெரியோர்க பலர் உண்டு. பாரதியார் கூட இங்கு சில காலம் தங்கி இருந்துள்ளார்.துளசியின் இராமசரிதத்தைப் பாடிவாறு மக்கள் கொண்டாடும் இராம லீலாவும், அன்னபூரணி வெள்ளி இரத்தில் பவனி வரும் தீபாவளி திருநாளும், சிவபெருமானுக்கு உகந்த சிவராத்திரியும் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இராமேசுவரத்தில் இராமபிரான் ஈசனை வணங்கிய இடத்தில் மண்ணை எடுத்துக் கொண்டு
பிரயாகைக்குப் போய் கரைத்துவிட்டு,அங்கிருந்து கங்கை நீரை எடுத்துக்கொண்டு காசிக்குப்போய் விசுவநாதரை தரிசனம் செய்துவிட்டு, காயவில் பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய கர்மாக்களைச் செய்து முடித்துவிட்டு இராமேசுவரத்துக்குத் திரும்பி வந்து, கொண்டு வந்த கங்கை நீரால் இராமேசுவர நாத சுவாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு, ஊருக்குத் திரும்புவது. இதுதான் முழுமையான காசி யாத்திரை என்பது.

காசி என்ற பெயருக்கு ஒளி தரும் இடம் என்று பொருள் கூறுவார்கள். காசியின் நீளம் கங்கைக்கரை
ஓரமாக நான்கு மைல்கள்.இதில் 64 நீராடும் கட்டங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இவற்றில் மிக
முக்கியமானவை 5. இவற்றுக்கெல்லாம் காரணப் பெயர்களே வைக்கப்பட்டு இருக்கின்றன. சிலவற்றுக்கு,
அருகில் உள்ள ஆலயம், கட்டிடத்தின் பெயரையே கொடுத்திருக்கிறார்கள்.அஸி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. அஸி நதி இங்குதான் வந்து கங்கையில் சங்கமம் ஆகிறது. தசாசுவமேத கட்டம்- பத்து அசுவமேத யாகங்களைச் செய்த பலன் கிடைக்கக்கூடிய கட்டம்;வருணா கட்டம் ஖

வருணா நதி சங்கமாகும் காசியின் மறுமுனையில் உள்ள கட்டம்; பஞ்சகங்கார கட்டம்- ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமமாகும் இடத்தில் உள்ள கட்டம். மணிகர்ணிகா கட்டம் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரதான நீராடும் கட்டம். ஐமுட் கட்டகளிலும் கங்கையில் நீராடவேண்டும். இங்கு பித்ருகளுக்கு காரியம் செய்யப்படுகிறது. காலை ஐந்து மணிக்கு தொடங்கினால், ஐந்து கட்டகளிலும், கங்கையிலும் நீராடி பித்ரு காரியம் செய்வதற்கு பிற்பகல் இரண்டு மணியாகும். பிற்பகலில் ஓய்வெடுத்து மாலையில் காசி விசுவநாதரை தரிசிக்கலாம்.மணிகர்ணிகா கட்டத்தை ஒட்டி மண்டபம் இருக்கிறது. இங்கே நீராடி இந்த மண்டபத்தில் அமர்ந்துதான், முக்கியமான பித்ரு கர்மாக்களைச் செய்கிறார்கள்.


இதை ஒட்டி அமைந்துள்ள அரிச்சந்திர காட் மிகப் பழைமையானது.இங்குதான் சந்திரமதி தனது
மகன் லோகிதாசனைத் தீ மூட்டி எரிக்க வந்தாள். அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து மனைவியும், மகனையும் பார்த்தான். உண்மைக்குக் கிடைத்த உயர்வைத் தேவர்கள் இங்கேதான் அறிந்து கொண்டார்கள். அரிச்சந்திரா காட்டில் உடல் எரிக்கப்படுகிறது..இந்துக்களிடையே மிகவும் பெருமை தரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.

அரிச்சந்திரன் வைத்துப் பூஜித்த மைசானேசுவரர்ஒஒ என்ற சிவலிங்கம் இன்றும் அங்கே இருக்கிறது.
மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி மறைபவர்கள் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.
மணிகர்ணிகாஷ்டகஒஒத்தில் ஆதிசங்கரர் இந்த கட்டத்தைப் பற்றி மிகச்சிறப்பாக கூறி இருக்கிறார். இங்கே நீராடியபின் மறைபவர்கள் இந்திரனும் சூரிய தேவனும் கை நீட்டி அழைத்துச் சென்று சொர்க்கத்தில் சேர்ப்பார்கள் என்பது நம்பிக்கை.

மணிகர்ணிகா கட்டத்தின் அருகில் ஒரு குளம் இருக்கிறது. முதலில் கங்கையில் நீராடி விட்டுப் பிறகு
இதிலும் நீராடினால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள். சக்கரதீர்த்தம் என்ற இந்தக் குளம் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டது என்பது ஐதீகம். மகாவிஷ்ணுவ தனது கையில் உள்ள சக்கராஆயுதத்தினால் இந்தக்குளத்தைத் தோற்றுவித்தாகவும்,கங்கையில் மூழ்கி எழுந்த அவருடைய
திருமேனியிலிருந்து வடிந்த புனித நீர் இந்தத் திருக்குளத்தை நிறைந்ததாகவும் சொல்லுகிறார்கள்.
இந்தக் குளத்தில் நீராடப் பார்வதியும், பரமேசுவரனும் வந்தார்களாம். அப்்படி நீராடியதும் ஈசன் ஆனந்த
நடனம் ஆடத்தொடங்கி விட்டாராம். அப்போது அவர் காதில் அணிந்திருந்த குண்டலாபரணம் தெறித்து, முடியிலிருந்த மணியுடன் கங்கையில் விழுந்துவிட்டதாம்.பார்வதி தேவியின் கர்ண புஷ்பம்,விசுவநாதரின் [1] முடிமணி இரண்டும் சங்கமமான இடம் என்பதனால் அந்த நீராடும் கட்டத்துக்குத் தனி மகிமை இருக்கிறது.

இந்த மணிகர்ணிகா கட்டத்தில் நீராடியபின் சக்கர தீர்த்தத்தில் குளித்து,சிரார்த்தம் செய்யவேண்டும்.
இங்கு பலவகை தானங்கள் செய்வதைப் பார்க்கலாம்.வசதியுள்ளவர்கள் பசுவை வாங்கி தானம் செய்கிறார்கள். மணிகர்ணிகா கட்டத்தை ஒட்டித் தாரகேசுவரர் ஆலயமும்,மேலே துர்க்கையின் கோயிலும் இருக்கின்றன. இவற்றை வலம் வந்து உள்ளே போய் சுவாமியைத் தொட்டுப் பூஜிக்கலாம்.கங்கை நீரை எடுத்து அபிஷேகம் செய்யலாம். மலர் மாலைகளைச் சார்த்தலாம்.பக்தர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.தாரகேசுவரர் தரிசனம் முடித்துக்கொண்ட பிறகுதான் காசி விசுவநாதரை தரிசிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம்.கையில் கங்கை நீரை எடுத்துச் சென்று விசுவநாதருக்கு அபிஷேகம் செய்யலாம்.

காசிவிசுவநாதர் ஆலயம் குறுகலான ஒரு சந்தில் இருக்கிறது. உள்ளே பிராகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் கட்டப்பட்டது. நீராடிவிட்டு வருபவர்கள்கவனமாக வரவேண்டும்.மையத்தில் காசிவிசுவநாதரின் கருவறை இருக்கிறது. கங்கை நீராலும்,பாலாலும்,வில்வ இலைகளாலும் அர்சித்து, அபிஷேகம் செய்யலாம். மலர்களை, மலர் மாலைகளை சாத்தி மகிழலாம்.

இரவு வேளையில் இங்கே மகேசுவர பூஜை நடக்கிறது. ஒரு மணி நேரம் பூஜை செய்கிறார்கள்.
சிவ தோத்திரம் சொல்லுகிறார்கள். படிப்படியாகச் சுவாமியை அலங்கரிக்கிறார்கள். முதலில் கங்கை நீர், பிறகு பால், தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். நாகாபரணம் சிவலிங்கத்தின் முடியை அலங்கரிக்கிறது. ஐந்து முக தீபம் காட்டி அர்ச்சனை முடிக்கிறார்கள். ஏழு அந்தணர்கள் வாழ்க்கையின் ஏழு நிலைகளையும், பஞ்சமுக விளக்குகள் [தீபம்]ஐம்புலன்களையும் உணர்த்துவதாக விளக்கம் கூறுகிறார்கள்.

இந்த இரண்டையும் பயன்படுத்தி ஈசனை வழிபட வேண்டும் என்பது தத்துவம் ஆகும்.
காசிவிசுவநாதர் ஆலயத்தில் சிவராத்திரி மிகவும் விசேஷமானது.இந்த ஆலயத்தை அகல்யாபாய் என்ற
ராணி முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டியதாகச் சொல்லுகிறார்கள். கோயிலில் இருபத்தியிரண்டு மணங்கு நிறையுள்ள தங்கத் தகடுகள் உபயோகிக்கப்பட்டதாம்.அதனால் இன்றும் காசிவிசுவநாதர் ஆலயம் தங்க ஆலயம் என்றே குறிப்பிடுகிறார்கள். காசிவிசுவநாதர் ஆலயம் அமைந்துள்ள அதே தெரு சற்றே தூரத்தில் மாதா அன்னபூரணியின் கோயிலும் அமைந்திருக்கிறது. காசிவிசுவநாதருக்கு தேவி உணவு அளித்த இடம். அதனால் காசியில் பசிப்பிணி இல்லை என்று சொல்லுகிறார்கள். இதை நிரூப்பதைப் போலவே இங்கு வரும் யாத்திரீகர்கள் அன்னதான் உற்சவம் நடத்துகிறார்கள்.

அழகான சித்திர வேலைப்பாடுகள் அமைந்த அன்னபூரணியின் கோயில் மராத்திய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் அமைந்திருக்கிறது. அதைப் பன்னிராண்டு கல்தூண்கள் தாங்குகின்றன. அம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ள சலவைகள் தளத்தில் பக்தர்கள் அமர்ந்து பஜனை செய்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.

கர்ப்பக்கிருகத்தில் உள்ள அன்னபூரணியைத் துவாரங்கள் செதுக்கிய பலகணியின் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். தேவியின் திருமுகம் மட்டுமே தரிசனத்துக்குக் கிட்டுகிறது. அன்னபூரணியின் அழகான
அலங்காரத்துடன்,கீழே ஸ்ரீ சக்ரமேரு யந்திரம் இருக்கிறது.இடக்கரத்தில் தங்கக் கிண்ணம்,வலது கரத்தில் தங்கக் கரண்டி இவற்றுடன், பிச்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் அன்னபூரணி.

அம்பாள் தனியாக அமர்ந்திருப்பதில்லை.இருபுறமும் ஸ்ரீ தேவியும்,பூதேவியும் கொலுவிருந்து,கையை
தூக்கி ஆசீர்வதித்து அருளுகிறார்கள். இவையும் பொன்னால் ஆனது.விசுவேசுவரரின் உருவம் மட்டும்
வெள்ளியால் ஆனது.அன்னபூரணியை தீபாவளியன்று தரிசிப்பது வெகு விசேஷம்.
அன்னபூரணி ஆலயம் அருகில் விசாலாட்சியின் ஆலயம் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில்
இந்த ஆலயம் தமிழ் நாட்டு பாணியில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலான இந்த கோயில் நாட்டுக் கோட்டை செட்டியார் அமைப்பு பராமரித்து வருகிறது.

குத்து விளக்கின் ஒளியில் கோயில் கர்ப்பக்கிருகத்தில் தேவியைத் தரிசிக்கலாம். சிவலிங்கம், தண்டாயுதபாணி, விநாயகர், சண்டிகேசுவரர் ஆகியோர் சந்நிதிகளுடன் நவக்கிரங்களும் உண்டு. தமிழ் நாட்டு ஆலய அமைப்பிலேயே உள்ளது.

இங்கு நவராத்தியும்,சிவராத்திரியும் விசேஷமானது. காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய மூன்று ஆலயங்களிலுமே நாதசுர இசை உண்டு. தமிழ் நாட்டின் முத்திரையை அங்கே மனம் குளிரப் பார்த்து காது குளிர கேட்கலாம்.

பகுதி-1 நிறைவு. பகுதி-2 விரைவில்.

என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
இன்பத்தமிழ் எங்கள் மொழி
தமிழ் எமது மொழி

திருச்சிற்றம்பலம்

அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கப்பூர்

No comments: