Monday, September 11, 2006

பாரதி பயணத்தின்......ஒரு சிறு குறிப்பு.

எட்டயபுரத்து கவிதைக்கரசன் பாரதி நடத்தி முடித்த பயணத்தின்....... ஒரு சிறு குறிப்பு.

1882 : டிசம்பர் 11, கார்த்திகை 27 ம் தேதி பாரதி பிறந்தார். எட்டயபுரத்தில் தந்தை
சின்னச்சாமி அய்யருக்கும் தாய் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.
பெற்றோர் வைத்த பெயர் சுப்பிரமணியன். செல்லப் பெயர் சுப்பையா.

1887 : பாரதியாரின் தாய் லட்சுமி அம்மாளுக்கு மரணம் சம்பவித்தபோது, அவருக்கு வயது 5.

1889 : தந்தை மறுமணம். சுப்பையாவுக்கு பூணூல் போடும் சடங்கு;
கவி இயற்றும் ஆற்றல் வெளிப்படுகிறது.

1893 :11 வயதான சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் சோதித்து,
கவித் திறனை வியந்து கலைமகள் சுப்பையாவின் நாவில் குடி கொண்டிருக்கிறாள்
என்று சொல்லி " பாரதி " என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவிக்கின்றனர்.

1894 - 1897 : திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் ஐந்தாம் படிவம் வரை பயிலுதல்;
தமிழ் பண்டிதர்களுடன் விவாதங்களில் கலந்து வெற்றி கொள்ளுதல்.

1897 : ஜூன் மாதம் 15ம் தேதி பதினான்கரை வயது பாரதிக்கும் ஏழு வயதுச்
செல்லம்மாளுக்கும் திருமணம் நடந்தேறுகிறது.

1898 : ஜூன் மாதம் தந்தை திடீர் என மாரடைப்பால் மரணம். மிகுந்த துயரடைகிறார் பாரதி.

1898 :மறு மாதமே, பாரதியின் அத்தை ருக்மணி அம்மாள் என்ற குப்பம்மாள்
பாரதியை காசிக்கு அழைத்துச் செல்லுகிறார்.

1898 - 1901 : அலகாபாத்தில், எட்டாவது வகுப்பில செயநாராயண் உயர்நிலைப்
பள்ளியில் சேந்தார். இரண்டு வருடத்தில் பத்தாவது முடித்து அலகாபாத்
யூனிவர்சிட்டி மேற்பார்வையில நடந்த தேர்வில் முதல் வகுப்பில் பாஸ்
செய்கிறார். இந்து சர்வகலா சாலையில் சமச்கிருதம், இந்தி பயின்றார்.
அப்போதுதான் கச்சம், வால்விட்ட தலைப்பாகை, மீசைப் பழக்கம் எல்லாம்
பாரதியின் உருவத்தில் மாற்றம் ஏற்பட்டது.

1902 - 1904 : எட்டயபுரம் வருகை. விருப்பமில்லா வேலையான மன்னருக்குத்
தோழர் வேலை. மதுரை விவேக பாநுவில் " தனிமை இரக்கம் " என்ற
முதல் பாடல் அச்சேறுகிறது. மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில்
1904 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை தமிழ் ஆசிரியர் பணி. பின்னர்
சென்னை வந்து சுதேச மித்திரனில் உதவி ஆசிரியர் பொறுப்பேற்பு.
சக்கரவர்த்தினி மாதப் பத்திரிக்கையில் ஆசிரியராகவும் ஆகிறார்.

1905 - 1906 : பாரதி அரசியலில் தீவிரமாகிறார். காசி காங்கிரஸ் கூட்டத்தில்
கலந்து கொள்ளச் சென்று விவேகானந்தரின் சிசியை நிவேதிதா தேவியைச்
சந்தித்து அவரை ஞான குருவாக ஏற்றல். 1906 ஏப்ரலில் "இந்தியா "
வாரப் பத்திரிக்கை உதயம். பாரதி பொறுப்பாசிரியராகிறார். மண்டபம்
ந. திருமலாச்சாரி, எஸ்.சிறீ.நிவாஸாச்சாரியார், சா.துரைசாமி அய்யர்,
வி.சக்கரைச் செட்டி, வ.உ.சி. ஆகியோருடன்

நட்பு ஏற்படுதல். பால பாரதா ஆங்கில வாரப் பத்திரிக்கை ஆரம்பம்.

1907 :டிசம்பர் மாதம் சென்னையில் இளைஞர் படையைத் திரட்டி சூரத் அழைத்துச்
செல்கிறார். காங்கிரசில் பிளவு ஏற்பட திலகர், அரவிந்தர், லாலாலஜபதி ராய்
ஆகியோருடன் பாரதி சந்திப்பு நிகழுகிறது. வி.கிருஷ்ண சாமி அய்யர் பாரதியின்
சுதேச கீதங்கள் பாடல் தொகுப்பை அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கிறார்.


1908 : சுயராஜ்ய தினம் சென்னையில் பாரதியாலும், தூத்துக்குடியில் வ.உ.சி. யாலும்
மற்றும் சுப்பிரமணிய சிவா,சுதேசி பத்மநாப அய்யங்கார் முதலியோரால்
கொண்டாடப்படுகிறது. சிறைத் தண்டனை. வழக்கில் பாரதி சாட்சியமளிக்கிறார்.
புதுவைக்குப் புறப்பட்டுப் போகிறார்.

1908 ஖ 1910 : சுதேச கீதங்கள் கவிதைத் தொகுதியை பாரதி முதல் நூலாக
வெளியிடுகிறார். இந்தியா பத்திரிக்கை ஆசிரியர் கைது. பாரதிக்கு கைது
வாரண்ட். பாரதி தப்பிப் போய் புதுவையில் இந்தியாவை வெளியிடும்
முயற்சியில் ஈடுபடுகிறார். குவளைக் கண்ணன் சந்திப்பு.. புதுவையிலிருந்து
இந்தியா அச்சிட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது.
பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்ய இந்தியா பத்திரிக்கை நின்று போகிறது.
பாரதி ஏற்பாட்டின் பேரில் அரவிந்தர் புதுவை வந்து சேருகிறார். பாரதியின்
" சன்ம பூமி " வெளியீடு. நவம்பரில் கனவு வெளியீடு. வ.வே.சு. அய்யர் வருகை.

1911 : மணியாச்சியில் கலெக்டர் ஆசு துரை கொலை. புதுவை தேச பக்தர்கள் மீது சந்தேகம்.
போலீஸ் கெடுபிடிகள் அதிகரிப்பு. பாரதியின் சிசியகோடிகள் பெருகுகின்றனர்.
1912: உழைப்பு மிக்க வருடம். கீதையை மொழி பெயர்க்கிறார். கண்ணன் பாட்டு,
குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் எழுதப் பெறுகின்றன. பாஞ்சாலி சபதம் முதல்
பாகம் பிரசுரமாகிறது.

1913 - 1914 :சுப்பிரமணிய சிவாவின் ஞானபாநு பத்திரிக்கைக்கு எழுதுகிறார்.
முதல் உலகப் போர் துவக்கம். தென் ஆப்பிரிக்காவில் மாதா மணி வாசகம்
நூல் பிரசுரம். சின்னச் சங்கரன் கதை கையெழுத்துப் பிரதி நின்று போதல்.
( இந்த ஆவணமெல்லாம் திரட்ட முடிந்தால் எப்படி இருக்கும்?)

1915 : பாப்பாப் பாட்டு உதயம்.

1917 :கண்ணன் பாட்டு முதல் பதிப்பை பரலி நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறார்.

1918 :புதுவை வாசம் சலித்துப் போய் சென்னை வரும் பாரதியை கடலூர் அருகே நவம்பர்
20ம் தேதி கைது செய்து 34 நாட்கள் சிறை வாசம். வழக்கில் பாரதி விடுதலையாகிட
நேரே மனைவி செல்லம்மாளைத் தேடி கடயம் வருகிறார். திருவனந்தபுரம், எட்டயபுரம்,
காரைக்குடி, கானாடுகாத்தான் போய் வருகிறார். எட்டயபுர மன்னருக்குச் சீட்டுக்
கவிகள் பயனில்லை என்ற முடிவு. தாகூருடன் நோபல் பரிசுக்காகப் போட்டியிட
விருப்பம். ஆனால் ஆசை நிறைவேறவில்லை.

1919 :மார்ச் மாதம் சென்னைக்கு விஜயம் செய்கிறார். ராஜாஜி வீட்டில் காந்திஜியைச் சந்திக்கிறார்.

1920 :டிசம்பர் மாதம் மீண்டும் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக வேலை.
பாரதி நிறைய கட்டுரைகள் எழுதுகிறார்.

1921 :ஜூலை - ஆகஸ்ட் திருவல்லிக்கேணி கோயில் யானை தும்பிக்கையால் தள்ளிவிட
குவளை கண்ணன் காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார். பின்னர் குணமாகி
அலுவலகமும் செல்கிறார். ஆனால் செப்டம்பர் மாதம் வயிற்றுக் கடுப்பு கண்டு படுத்த
படுக்கையாகிவிடுகிறார். செப்டம்பர் 11ம் தேதி நோய் கடுமையாகி விட, பாரதி
மருந்துண்ண மறுக்கிறார்.

செப்டம்பர் 12ம் தேதி இரவு அவர் எழுதி அவரால் மிக விரும்பப் பட்ட "நல்லதோர் வீணை செய்து "
பாட்டை பாடச் சொல்லி கேட்டிருக்கார்.

அங்கிருந்த பாரதி தம்பி விசுவநாதன் பாடியிருக்கார்.கடைசியாக அந்தப் பாட்டைக்
கேட்டுக் கொண்டே தன் உயிரை விட்டிருக்கார். அப்போது நள்ளிரவு தாண்டி மணி
1.30. 39 வயது நிரம்பாத நிலையில் தன் நிறைவேறாத பாரத தேச விடுதலைக்
கனவுகளுடன் இந்த மண்ணுலக வாழ்க்கையிலிருந்து விடுதலை
பெற்று விண்ணுலகம் ஏகினார்.








அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
..........................................
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/

1 comment:

கணியன் said...

பாரதி பிறந்த தமிழ் தேதி தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவில் கிட்டியது. நன்றி.

---
ஆமாச்சு